நாளை போராட்டம் நடத்த ஜெ. வருகை – அல்லோகல்லப்படும் நெய்வேலி
தமிழகத்தில் நிலவி வரும் மின் தடை மற்றும் பற்றாக்குறையைக் கண்டித்து நாளை நெய்வேலியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தனது தலைமையில் நடைபெறும் என ஜெயல்லிதா அறிவித்துள்ளார்.
இதையடுத்து பெரும் கூட்டத்தைக் காட்ட அதிமுகவினர் தீவிர முஸ்தீபுகளில் இறங்கியுள்ளனர்.
முன்னதாக நெய்வேலி வாட்டர் டேங்க் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் முழுவுருவ வெண்கலச் சிலையை ஜெயல்லிதா திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர் நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்.
நெய்வேலி வரும் ஜெயலலிதாவை வரவேற்க முன்னாள் அமைச்சர்கள் நெய்வேலியில் முகாமிட்டு பணிகளை கவனித்து வருகின்றனர். கடலூர் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் போட்டிப் போட்டிக் கொண்டு ராட்சத வடிவில் கட்-அவுட் அமைத்து வருகின்றனர். இதனால் நெய்வேலி நகர் முழுவதும் கட்-அவுட்களால் நிரம்பி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் 9 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 50 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு என்எல்சியின் விருந்தினர் இல்லங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர கட்சியின் அனைத்து மாவட்டச் செயலர்கள் நெய்வேலி வருகை தரவுள்ளனர்.÷இவர்களுக்காக நெய்வேலி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கும் லாட்ஜ்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினமே பாமகவைச் சேர்ந்த விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கோவிந்தசாமியின் இல்ல திருமண நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், பாமக எம்.எல்.ஏ.க்கள் என்எல்சி விருந்தினர் மாளிகையில் அறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
ஜெயலலிதா பாதுகாப்புக்கு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கும் என்எல்சி விருந்தினர் மாளிகையில் அறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால் என்எல்சி நிர்வாகம் யாருக்கு அறை கொடுப்பது எனத் தெரியாமல் திணறிவருகிறது.
இப்படி லாட்ஜுகளை அதிமுகவினர், பாமகவினர், போலீஸார் மொய்த்துள்ளதால் நெய்வேலியில் கல்யாணம் காட்சிக்கு வருபவர்கள் அறை கிடைக்காமல் திணறி வருன்றனர்.