காவல் நிலைய சுவர் ஏறி குதித்து விசாரணைக் கைதி ஓட்டம்
நெல்லை: காவல் நிலையத்திலிருந்து சுவர் ஏறிக் குதித்து பிரபல கொள்ளையன் தப்பி ஓடி விட்டான்.
பாளை போலீசார் நேற்றிரவு ரோந்து சென்றிருந்தபோது பிரபல கொள்ளையன் பிடிப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த குமார் என்பது தெரிந்தது. அவனிடம் இருந்து 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குமார் எங்கெல்லாம் கொள்ளையடித்தான் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக பாளையங்கோட்டை குற்ற பிரிவு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
பிற்பகல் 2 மணி அளவில் ஒரே ஒரு பாரா காவலர் மட்டும் பணியில் இருந்தார். அப்போது சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி பின்பக்கம் சென்ற குமார் நைசாக சுவர் ஏறி குதித்து தப்பி விட்டான்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர். தப்பியோடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாளை யங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். அவர்கள் குதிரைகளை அடைக்க பயன்படுத்திய லயம் தற்போது காவல் நிலையமாக செயல்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மேல்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேற்கூரை இடிந்து விழுமோ என்ற பயத்தில் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கின்றனர் காவலர்கள்.
மேலும் கைதிகளை அடைக்க தனியறை எதுவும் இல்லை. எஸ்ஐ, ஏட்டுகள் இருக்கும் அறையில்தான் கைதிகளையும் வைத்து காவல் காக்கின்றனர். பின்புறமுள்ள கழிப்பிட சுவர் உயரம் குறைவாக இருப்பதால் கைதிகள் ஏறி குதித்து ஓடுவதற்கு வாய்ப்பாக உள்ளது. இதுவரை 3 கைதிகள் தப்பியோடி விட்டனர் இங்கிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.