வேலூர் லாட்ஜில் யுஎஸ் பெண்ணை கற்பழிக்க முயற்சி-லாட்ஜ் உரிமையாளர் மகன் கைது
வேலூர்: வேலூர் லாட்ஜில் அமெரிக்கப் பெண்ணை கற்பழிக்க முயன்ற லாட்ஜ் உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க்கை சேர்ந்தவர் தமன்னா என்ற ஜேனட் கந்தகார் (42). இவர் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தனது கணவர் ஆசாத் இக்பாலுடன் வந்துள்ளார்.
வேலூர் காகிதப் பட்டறையில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் தங்கியிருந்தனர். இக்பாலின் விசா காலம் முடிவடைந்ததால் சில நாட்களுக்கு முன் அவர் அமெரிக்கா திரும்பிவிட்டார்.
தமன்னா மட்டும் லாட்ஜில் தங்கி சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் லாட்ஜ் உரிமையாளர் மகனும், லாட்ஜின் மானேஜருமான அசோக்குமார் (25) தமன்னாவின் அறைக்கு அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
தமன்னா அதிர்ச்சியடைந்து கூச்சலிடவே பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரைக் காப்பாற்றினர்.
இதுகுறித்து தமன்னா தனது கணவருக்கு போனில் தகவல் கொடுத்தார். அவர் இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகார் சென்னை அமெரிக்க தூதரகத்தின் மூலம் வேலூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. அறிவுச்செல்வத்துக்கு கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாட்ஜ் உரிமையாளர் மகன் அசோக்குமாரை கைது செய்தனர்.