தமிழகத்தில் குறைந்த அளவே மின்வெட்டு உள்ளது - ஆற்காடு வீராசாமி
மின்வெட்டுப் பிரச்னைக்காக நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.
அந்த அறிக்கை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மாநிலத்தின் தேவைக்கேற்ப புதிய மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியிருப்பாரேயானால், இப்போதுள்ள குறைந்த மின்வெட்டு கூட மாநிலத்திலே ஏற்பட்டிருக்காது.
மாநிலத்தில் தற்போதுள்ள ஓரளவு மின் பற்றாக்குறைக்கும் காரணமே ஜெயலலிதாதான்.
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பிறகுதான், பல மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. அந்தத் திட்டங்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும்போது, இப்போதுள்ள மின்வெட்டு கூட தமிழகத்திலே இருக்காது.
இப்போதைய மின்வெட்டுக் கூட விவசாயிகளையோ, மாணவர்களையோ, தேர்வுத் தாள் திருத்தும் ஆசிரியர்களையோ பாதிக்காத அளவுக்குத் தான் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கிறார். அவரது அறிவிப்பு ஏதோ உள்நோக்கத்தாடு தான் இருக்கிறது என்பது இதிலிருந்து புரிகிறது.
நாட்டையே மின்வெட்டால் இருட்டாக்கி வைத்திருக்கிறோம் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவருடைய அறிக்கையை உண்மை என்று யாரும் நம்பத் தயாராக இல்லை. 2010 முதல் 2014 வரை மொத்தம் 7,798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு புதிய மின் திட்டங்களின் மூலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திட்டத்துக்கான பூர்வாங்க வேலைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏதுமின்றி, எந்தவொரு மின் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் தமிழ்நாடு இருக்கும். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.