திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பற்றாக்குறை - எஸ்பி அருண்
உடுமலை, பல்லடம் பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நகைகள், வாகனங்களை போலீசார் மீட்டனர்.
உடுமலையில் அவற்றை பார்வையிட்ட எஸ்பி அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டம், குற்றச் சம்பவங்களில் சென்னைக்கு அடுத்ததாகவும், வாகன விபத்துக்களில் சென்னையை காட்டிலும் முதலிடம் வகிக்கிறது.
மேலும், வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், ஆதாயக் கொலையில் ஈடுபடும் கொலையாளிகளையும் கைது செய்து, திருடுபோன நகைகள், பணம், பொருட்களை போலீஸ் தொடர்ந்து மீட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 25 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் 32.5 சதவீதம் போலீசார் பற்றாக்குறை உள்ளது. காவல் நிலையங்களுக்கு கூடுதல் போலீசார் தேவை என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தற்காலிகமாக, சேலம் மாவட்டத்திலிருந்து 100 போலீசார் திருப்பூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது, போலீஸ் ஸ்டேஷன்கள் தரத்துக்கு ஏற்றவாறு 'லைட்', 'மீடியம்', 'ஹெவி' என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப போலீஸ் பணியிடங்கள் அதிகரிக்கப்படுகிறது.
அதன்படி மொத்தமுள்ள, 25 போலீஸ் ஸ்டேஷன்களில், 10 போலீஸ் ஸ்டேஷன்கள் 'ஹெவி' போலீஸ் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
இந்த வகை போலீஸ் ஸ்டேஷன்களில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் , ஆறு சப் -இன்ஸ்பெக்டர்கள் , 72 போலீசார் என மொத்தம் 80 பேர் பணிபுரிவார்கள்.
திருப்பூர் மாவட்டத்தின் குற்றச்சம்பவங்களை கணக்கிட்டு, கூடுதலாக 10 போலீஸ் ஸ்டேஷன்களை 'ஹெவி' போலீஸ் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, திருப்பூரில், வடக்கு, தெற்கு, ரூரல், அனுப்பர்பாளையம், பெருமாநல்லூர், அவிநாசி, மங்கலம் , பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்களும், உடுமலை சப்-டிவிஷனில், உடுமலை, குடிமங்கலம் ஆகிய இரு போலீஸ் ஸ்டேஷன்களும் 'ஹெவி' போலீஸ் ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது' என்றார்.