பிரபாகரனின் தாயார் விவகாரம்-விவாதத்தை தவிர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்
ஆனால், அதில் அதிமுக உறுப்பினர்கள் யாரும் பங்கேற்று பேசவில்லை. ஆலோசனை கூட்டம் இருப்பதாகக் கூறி அனைவரும் வெளியில் சென்று விட்டனர்.
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துப் பேசியது. பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்த்துப் பேசினர்.
ஆனால், இந்த விவாதத்தில் பங்கேற்பதை அதிமுக தவிர்த்துவிட்டது. இந்த விவாதம் நடக்கவிருந்த நிலையில் தங்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியே சென்று விட்டனர்.
இந் நிலையில் இந்த விவாதத்துக்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, முன்பு அதிமுக அரசு எழுதிய கடிதத்தால்தன் பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியதோடு, இன்று அவையில் அதிமுகவினர் விவாதத்தில் பங்கேற்காததையும் சுட்டிக் காட்டிப் பேசினார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்:
இந் நிலையில் பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சை அளிக்கக் கோரியும் அவர் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்தும் சென்னையில் இன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
அவருக்கு மீண்டும் அனுமதி கொடுத்து சிகிச்சை அளிக்காதவரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்:
அதே போல பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,
போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என ஐ.நா.சபை பிரகடனம் படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக போராடி உயிரை துறந்த பிரபாகரனின் தாய் பார்வதி அனாதையாக நிற்கிறார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது. மனிதாபமற்ற செயல். இதை வன்மையாக கண்டிக்கிறேன். தூக்கு தண்டனை கைதியை கூட தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பு மருத்துவ சிகிச்சை கொடுத்து ஆரோக்கியத்துடன் தூக்கிலிடுகிறார்கள். ஆனால் பிரபாகரனின் தாயாரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
பார்வதி அம்மாளுக்கு தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்கவும் வாழ்நாள் முழுவதும் தங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.