விரைவில் அரசு ஊழியர் குறைகேட்பு நாள் கூட்டம்!
சென்னை: 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
முன்பெல்லாம் இத்தகைய கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கூட்டமே நடக்கவில்லை.
இதனால் ஊழியர்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்ற குறை இருந்தது. இப்பிரச்சினை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக குறை தீர்ப்பு நாள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவும், அதை தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
வாரிசுக்கு வேலை, திருமண கடன், வாகனம் வாங்குவதற்கு கடன், பண்டிகை முன்பணம், பதவி உயர்வு என ஊழியர்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு இக்கூட்டத்தில் கிடைக்கும்.
முதல்வரின் இந்த உத்தரவுக்கு, என்.ஜி.ஓ. சங்கம் சார்பில் மாநில தலைவர் சூரியமூர்த்தி தலைமையில் கூடிய நிர்வாகக்குழு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த கூட்டத்தில் அனைத்து ஊழியர் சார்பிலும் 24 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். 12 அரசுதுறை செயலாளர்களும் என்.ஜி.ஓ. சங்கத்தை சேர்ந்த 9 நிர்வாகிகளும் தலைமை செயலகம் சார்பில் ஒருவரும், அரசு அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் ஒருவரும் ஓட்டுனர் சங்கம் சார்பில் ஒருவரும் இந்த குறை கேட்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.