எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் ஐஸ்லாந்தில் பூகம்பம்- மக்கள் பீதி
ரெய்ஜாவிக்: ஐஸ்லாந்தில் எரிமலை குமுறிக் கொண்டிருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஐஸ்லாந்தின் அய்ஜாப்ஜல்லாஜோகல் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து பெரும் சாம்பலைக் கக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஐரோப்பிய வான்வெளியின் பெரும் பகுதியில் சாம்பல் மண்டலம் சூழ்ந்திருப்பதால் விமானப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எரிமலை உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை தலைநகர் ரெய்ஜாவிக்கில் மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதற்கிடையே, எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பலின் அளவு குறையத் தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் கூறியுள்ளது. ஆரம்பத்தில் 11 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியானது. ஆனால் தற்போது 4 முதல் 5 கிலோமீட்டர் உயரத்திற்குதான் சாம்பல் வெளியாகி வருவதாக அத்தகவல் தெரிவிக்கிறது.