சென்னையில் நமல் ராஜபக்சே - கொதித்தெழுந்த தொண்டர்கள் கைது
தமிழ் இனப்படுகொலை செய்தவர் என சர்வதேச சமூகத்தால் விமர்சிக்கப்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நேற்று இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார்.
அதுவும், பொழுதுபோக்கு காரணத்துக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிப்பதற்காக இந்தியாவுக்கு நமல் ராஜபக்சே வந்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த போது, மனிதாபிமான உணர்வு சிறிதும் இல்லாமல் அவரை திருப்பி அனுப்பினர் அதிகாரிகள்.
இவ்விவகாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நமல் ராஜபக்சே மற்றும் இலங்கை போலீஸ் அதிகாரிகள் ராஜமரியாதையோடு வந்து செல்வதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் நேற்று சென்னை விமான நிலையம் முன்பு குவிந்துவிட்டனர்.
பெரியார் திராவிடக் கழக தொண்டர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சென்னை விமான நிலைய வளாகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயால் பாதிக்கப்பட்ட 80 வயது பார்வதி அம்மாளை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி விட்டு கிரிக்கெட் போட்டி பார்க்க வந்த நமல் ராஜபக்சேவை ராஜமரியாதையுடன் அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், போலீசாருடன் சென்று 13 பேரை கைது செய்தார்.
இதற்கிடையே, நேற்று டெல்லி போய் சேர்ந்துவிட்டதாகவும், அங்கிருந்து, சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.