For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட அதிமுகவின் கடிதமே காரணம்- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பிரபாகரன் தாயார் சென்னைக்கு வந்தது குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது. அவர் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக அரசு எழுதிய கடிதத்தால்தன் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வர விரும்பினால் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறினார்.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள். அவருடன் துணைக்கு ஒரு பெண் மட்டுமே வந்திருந்தார்.

பக்கவாத நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக 6 மாத கால இந்திய விசாவில் வந்த பார்வதி அம்மாவை, விமானத்திலிருந்து இறங்கக் கூட குடியேற்றத் துறை அதிகாரிகளும் தமிழக போலீசாரும் அனுமதிக்கவில்லை. அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

பார்வதி அம்மாளுடன் உரிய விசா பெற்று வந்த அந்தப் பெண்ணுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது இந்த நிகழ்வு. உரிய அனுமதி பெற்று வந்த, அதுவும் உயிருக்குப் போராடும், நடக்கவும் மூச்சு விடவும் சிரமப்படும் ஒரு மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடுமையை பலரும் கண்டித்தனர்.

இந்த நிலையில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

இதுபற்றி என்னுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு முன், கடந்தகால வரலாற்றில் சில துளிகளையாவது இந்த அவைக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசினுடைய உத்தரவு முதலில் திருமதி பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக விசா பெறலாம் என்று அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, மத்திய அரசினுடைய அதிகாரிகளே சிலர், விமான நிலையத்தில் விமானத்திற்குள்ளே நுழைந்து, “தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்'' என்று கூறி மலேசியாவிலிருந்து வந்த அவர்களை, மலேசியாவிற்கே திரும்ப அனுப்பியிருக்கிறார்கள்.

இது பற்றிய முழுத் தகவல் மறுநாள் காலையிலேதான் விவரமாகப் பத்திரிகைகளைப் படித்து நான் தெரிந்து கொள்ள முடிந்தது.

இதேபோல ஒரு சம்பவம் 23.8.1985 அன்று நம்முடைய தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஒரு உத்தரவு தந்தை செல்வா அவர்களுடைய மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டை விட்டு வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த ஆணையும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோளின்படிதான் இடப்பட்டது என்று கூறப்பட்டது. அதில் உண்மை எதுவோ எனக்குத் தெரியாது. ஆனால், ஆணை பிறப்பிக்கப்பட்டு அவர்கள் விமானம் ஏறுகிற நிலையில், எங்களுக்குச் செய்தி கிடைத்து, உடனடியாக “டெசோ'' அமைப்பின் சார்பாக (நான், வைகோ, நெடுமாறன், தமிழர் தலைவர் வீரமணி, பேராசிரியர் ஆகியோரெல்லாம் இருந்த அமைப்பு டெசோ) 25.8.1985 அன்று சென்னையிலே ஒரு கண்டனப் பேரணி நடத்தினோம். தொடர்ந்து 30 8 1985 அன்று ரயில் நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்தோம்.

அதனையொட்டி 5,000 பேர் அன்றைக்கிருந்த ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். உடனே மத்திய அரசு சந்திரஹாசன் மீதான உத்தரவைத் திரும்பப் பெற்றது. அதற்குப் பிறகு தொடர்ந்து 7.10.1985 அன்று பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவையும் திரும்பப் பெற்றது.

அந்தக் காலத்திற்கும், “டெசோ'' அமைப்பின் சார்பாக எல்லோரும் சேர்ந்து போராடியதற்கும், தனித்து இப்பொழுது மற்றவர்களுக்கெல்லாம் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக, ரகசியமாக இந்த விமான நிலைய வரவேற்பை அளித்ததற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் உணர்ந்தால் “அந்தோ தமிழர்களே!'' என்று நம்மை அறியாமல் நாம் சொல்லத்தான் நேரிடுகிறது என்பதை முதலிலே குறிப்பிட விரும்புகிறேன்.

திருமதி பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு வருவது பற்றி அவர்களிடமிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புவர்களிடமிருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ நேரடியாக வரவே இல்லை.

மத்திய அரசுக்கும் பார்வதி அம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தி தொடர்பு இருந்திருக்கிறதே தவிர தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், 5.5.2003 அன்று (அதிமுக ஆட்சி காலத்தில் )தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பத்தி 2 வருமாறு:

“Sri Lankan Tamils Velu Pillai and Parvathi Ammal may return to India. Their re-entry into India may not be desirable in view of their association with the LTTE Leader and Tamilar Desiya Iyakkam, banned organisations. Hence, the personal particulars of the above Sri Lankan Tamils are sent herewith to place their names under Black List/Prior Approval Category List, to prevent their re-entry into India through legal/illegal means."

இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள் எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ மிக முக்கியமான இந்தப் பிரச்சனையில் எல்லா கட்சிக்காரர்களும் குரலெழுப்புகின்ற இந்தப் பிரச்சனையில் அவர்கள் மாத்திரம் (அதிமுகவினர்) வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியிலே இருக்கிறார்கள்- அது தமிழர் கூட்டணி என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்சனையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசாங்கத்திற்குத் தான் உரிய பிரச்சனை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

நிச்சயமாகச் சொல்கிறேன். இரவு 12 மணிக்கு விமான நிலையத்திலே இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்திற்குத் தொடர்பு கொள்கிறேன். அந்த அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது.

ஆனால் இந்தச் செய்தியை முறையாக உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்கள். அப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவிற்கே, அதாவது கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் அங்கே வைத்திய வசதி பெறுவதாக பத்திரிகைகளிலே செய்தி வந்திருக்கிறது. அவர்கள் நான் மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அறிவிப்பார்களானால் நம்முடைய அருமை நண்பர் சுதர்சனம், ஜி.கே. மணி அவர்கள், சிவபுண்ணியம், ரவிக்குமார் மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்டதைப் போல அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மத்திய அரசின் பதிலைப் பற்றி, அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால்- அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்றார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X