சட்டமன்றத்தில் கிரிவலம்.. அதிமுக எம்எல்ஏ!
சென்னை: புதிய சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற கூடத்துக்கு வரவேண்டுமென்றாலும், மற்ற அலுவலக அறைகளுக்கு செல்ல வேண்டுமென்றாலும் கிரிவலம் செல்வது போல் சுற்றி, சுற்றி வரவேண்டியுள்ளது என்று அதிமுக எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.
1967ல் அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தார்.
43 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் அந்தத் துறைக்கு பொறுப்பு வகித்து வருகிறார். இந் நிலையில் சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது பேசிய பா.ம.க. எம்எல்ஏ ஜி.கே. மணி, பல்வேறு மாவட்டங்களிலே பாசனத் திட்டங்களை அறிவித்திருக்கிற இந்த நிலையில் பெரிய மாவட்டமாக இருக்கின்ற, மேட்டூர் அணை என்ற வரலாற்று சிறப்புக்குரிய அணை இருக்கும் சேலம் மாவட்டத்தில் பாசன வசதிக்கு பற்றாக்குறை இருக்கிறது. அது பற்றி முதல்வர் கவனித்து ஆவன செய்வாராளா என்று அறிய விரும்புகிறேன்.
அதேபோல ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் இந்த துறைக்காக மிகப்பெரிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியிருப்பதைப் போல இங்கேயும் பெரிய திட்டம் ஒன்றைக் கொண்டு வர மாநில அளவில் குழு அமைத்து நிறைவேற்ற ஆவன செய்வார்களா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நான் இப்போது இங்கே அறிவித்த எல்லா திட்டங்களையும் ஒருங்கிணைத்து நிறைவேற்றினால் அதுவே பெருந்திட்டமாகும். அந்த பெருந்திட்டம் நிறைவேற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதற்கு "மணியும்'' (ஜி.கே.மணி) வேண்டும். "மணியும்'' (பணமும்) வேண்டும்'' என்றார்.
புதிய சட்டமன்ற கட்டிட வடிவமைப்பின் பின்னணி:
தொடர்ந்து அவர் பேசுகையில், 2006ம் ஆண்டுக்குப் பின், இந்த அரசு பொறுப்பேற்ற பின், அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களுக்கெல்லாம் மணிமகுடம் சூட்டுவது போல, தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும் வகையில் சென்னை மாநகரின் அண்ணா சாலையில் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல், முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவை -தலைமைச் செயலக வளாகம் கடந்த 13.3.2010ல் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கால், என் தலைமையில், சோனியா காந்தி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைக்கு ஆயிரத்து அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், கி.பி. 950ம் ஆண்டில் சோழ மன்னன் பராந்தக சோழன், கிராம அளவிலே இருந்த மக்களாட்சி பற்றி உத்திரமேரூர் கல்வெட்டில் விவரித்துள்ளான். ஓர் அரசுக்கு மக்கள் எவ்வாறு அடிப்படை முக்கியத்துவம் உள்ளவர்கள் என்று அதிலே விளக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டப் பேரவை கட்டிடத்தை வடிவமைக்கும்போது இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெர்மன் நாட்டுக் கட்டிடக் கலை வல்லுநர்களிடம் நான் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள கருத்தைக் கூறி அது இக்கட்டிடத்திலே பிரதிபலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
அந்த அடிப்படையிலே தான் இந்த வளாகம் நான்கு வட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டமும் ஒரே அளவாக இல்லாமல் வெவ்வேறு அளவு கொண்டவை. ஒரு அரசுக்கு மக்களே பிரதானம் என்பதை விளக்கும் வகையில் முதல் வட்டம். இது பொது மக்கள் வளாகம் (பப்ளிக் பிளாசா).
இரண்டாவது வட்டம்தான் மக்கள் பிரதிநிதிகளாக நாமெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டங்களை இயற்றும் இந்த சட்டமன்ற வளாகம். இது பொது மக்கள் வளாகத்தை விட அளவில் குறைவானது.
மூன்றாவது வட்டம் நீதித் துறையைக் குறிக்கும் வகையில் - சட்டத் துறை நூலகம் அமையும் வளாகம். இது சட்டமன்ற வளாகத்தைவிட சற்று அளவில் குறைவான வளாகம்.
கடைசியாக உள்ளது தான் நான்கு வளாகத்தையும் விட சிறிய வட்டம். அங்கேதான் முதல்வர், மற்ற அமைச்சர்களின் அலுவலகங்கள் அமையவுள்ளன என்றார்.
பாத்ரூமில் சிக்கிக்கொண்டேன்-அதிமுக எம்.எல்.ஏ:
முன்னதாக அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு பேசுகையில்,
தற்போது கட்டப்பட்டுள்ள சட்டமன்றத்தை ஆளுங்கட்சியும், ஆதரவு கட்சியும் பாராட்டுகிறார்கள். இந்த சட்டமன்ற கூடத்துக்கு வரவேண்டுமென்றாலும், மற்ற அலுவலக அறைகளுக்கு செல்ல வேண்டுமென்றாலும் கிரிவலம் செல்வது போல் சுற்றி, சுற்றி வரவேண்டியுள்ளது.
இங்குள்ள பாத்ரூமின் உள்ளே சென்ற நான் வெளியே வர முடியவில்லை. கதவை திறக்க முடியவில்லை. நான் மட்டுமல்ல, ஆளுங்கட்சியை சேர்ந்தவரும் மாட்டிக்கொண்டார். கதவைத் தட்டி சத்தம் போட்டபோது, வெளியில் இருந்தவர்கள் எப்படியோ திறந்துவிட்டார்கள். ஒரு வழியாக வியர்த்து வெளியே வந்தோம் என்றார்.