For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றப் பின்னணியே இல்லாத ஒரு தமிழ் மூதாட்டி சென்னைக்கு சிகிச்சைக்கு வருவது குற்றமா? – அத்வானி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லாத ஒரு தமிழ் மூதாட்டி, சென்னைக்கு சிகிச்சைக்கு வருவது குற்றச் செயலா என்று மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி

லோக்சபாவில் நேற்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் எதிரொலித்தது.

திமுக, பாஜக, சிபிஐ கட்சிகளின் உறுப்பினர்கள் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் மத்திய அரசின் செயலையும் கடுமையாக கண்டித்தனர்.

மூத்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில், இந்தியத் தூதரகம் முறையான விசா அளித்தும் கூட இதுபோல ஒரு வயதான பெண்மணியை நாடு கடத்திய செயல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

எந்தவிதக் குற்றப் பின்னணியும் இல்லாத ஒரு வயதான தமிழ்ப் பெண்மணி சென்னைக்கு வந்து சிகிச்சை பெற விரும்பியது அவ்வளவு பெரிய குற்றச் செயலா. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தே ஆக வேண்டும்.

பார்வதி அம்மாளை நாடு கடத்திய செயல் மிகவம் அநாகரீகமானது, மனிதாபிமானமற்றது என்றார்.

மனிதாபிமானமற்ற செயல்-பொன்.ராதாகிருஷ்ணன்:

இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ விசா முறையாகப் பெற்றுக் கொண்டு, இந்தியாவிற்கு சிகிச்சைக்காக வந்தவரை விமானத்தில் இருந்தே அப்படியே திருப்பி அனுப்பி உள்ளனர். பிரபாகரனின் தாயாகப் பார்க்காமல் 80 வயது மூதாட்டி ஒருவர், உடல் உபாதையுடன் சிகிச்சைக்காக வந்தவர் என்ற முறையில் பார்த்தால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல்தான்.

இன்று வரை கிடைத்த செய்தியின்படி பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்ற தகவலும் இல்லை. சமீபத்தில் அவரது தந்தையும் மரணமடைந்த நிலையில் அவரது தாய் இங்கே சிகிச்சைக்காக வந்திருக்கிறார். இந்த பின்னணியை மனதில் கொண்டால், அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு இருப்பது நியாயமில்லை.

பாகிஸ்தானில் இருந்து கூட பல நோயாளிகள் இந்தியாவிற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஏன்? நாடாளுமன்றத்தையே தாக்க சதி செய்த அப்சல் குருவே இன்றும் இந்த மத்திய காங்கிரஸ் அரசால் தண்டிக்கப்படாமல் விருந்தாளி போல் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மும்பை வெடிகுண்டுக்கு காரணமான கசாப்பிற்கு இன்று பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு கொண்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் நொடிக்கு நொடி போர் விதிமுறைகளை மீறி கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது கூட ரத்த வெறிப்பிடித்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே போன்றவர்களுக்கு இங்கே இந்த மத்திய அரசால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதெல்லாவற்றையும் விட ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான நளினியை, பிரியங்கா எந்தவித தடையுமில்லாமல் சந்திக்க முடிகிறது. என்ன பேசினார்கள் என்று வெளியுலகிற்கு தெரிவிக்காமலேயே சந்தித்து உரையாடி வர முடிகிறது.

இவையெல்லாம் இப்படி நடந்து கொண்டிருக்க, ஒரு வயதான தமிழ் மூதாட்டி என்ற நிலையிலாவது, உடல்நிலை சரியில்லாதவர் என்ற நிலையிலாவது மத்திய அரசு அவரது சிகிச்சைக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த போக்கு ஒரு தவறான உள்நோக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசாங்கத்திற்கோ, தமிழக முதல்வருக்கோ தெரியாமல் இந்த சிகிச்சை மறுப்பு முடிவு எடுத்திருப்பதற்கு சாத்தியமில்லை. பார்வதியம்மாள் இலங்கைக்கு செல்வதற்கு முன் தமிழகத்தில் தான் இருந்தார். அப்போது பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர்.

இன்று ராஜபக்சேயைத் திருப்திப்படுத்த இவர்கள் எடுத்துள்ள இந்த மனிதாபிமானமற்ற முடிவு மிருகத்தனமானது என்றே சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X