ஐபிஎல்: தீவிரவாதிகளால் ஆபத்து-மகாராஷ்டிர அரசுக்கு எச்சரிக்கை
பெங்களூரில் நடைபெறவிருந்த ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.
நாளை முதல் அரை இறுதிப் போட்டியும், வியாழக்கிழமை 2வது அரை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து அரை இறுதிப் போட்டிகளை மும்பைக்கு மாற்றியது ஐபிஎல். ஆனால் மும்பைக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம் என உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர அரசை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மாநில டிஜிபி ஏ.என்.ராய் கூருகையில், மும்பைக்கு போட்டிகள் மாற்றப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் போட்டியை சீர்குலைக்க முயலக் கூடும் என உள்துறை எச்சரித்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் பாட்டீல் ஸ்டேடியம் அருகேயும், உள்ளேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 கட்ட பாதுகாப்பு ஸ்டேடியத்தைச் சுற்றிலும் போடப்பட்டுள்ளது என்றார்.
அரை இறுதிப் போட்டிகள் தவிர 25ம் தேதி மும்பையிலேயே இறுதிப் போட்டியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.