சங்கர்ராமன் கொலை வழக்கு 'அப்ரூவர்' ரவி சுப்பிரமணியம் தாய் வழக்கு
தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியம் கடந்த 13.12.2004ல் கைதானார். தற்போது காஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தீவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரவி சுப்பிரமணியம் அடிக்கடி மயங்கி விழுகிறார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிறை அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. சிறப்பு மருத்துவரிடம் சரியான சிகிச்சை கொடுக்காததால் ரவி சுப்பிரமணியத்தின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை தனியார் மருத்துவமனையிலோ அல்லது அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவிலோ அனுமதித்து சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அவரது தாயாரான எனக்கு ரவி சுப்பிரமணியத்தை பார்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் ஜின்னா ஆஜராகி, மனுதாரர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் முறையிடாமல் நேரிடையாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்றார்.
இதனையடுத்து மனுதாரர் முதலில் சம்பந்தப்பட்ட சிறை துறையிடம் முறையீடு செய்யுமாறு கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்கு பின்னர் தள்ளி வைத்தார்.
அந்தக் கொலை வழக்கில் அப்ரூவரான காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியன், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு எதிராக ஏராளமான தகவல்களை போலீசாரிடம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலை வழக்கு விசாரணை இப்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இந்தக் கொலையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு, ரவி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.