ஐபிஎல் கொச்சி சிக்கலிலிருந்து மீள பெனாசிரின் நண்பரை வக்கீலாக அமர்த்திய சுனந்தா
மும்பை: ஐபிஎல் கொச்சி அணி சிக்கலில் சிக்கியுள்ள சுனந்தா புஷ்கர் தனது வழக்கில் ஆஜராவதற்காக பிடித்துள்ள வக்கீல் ஆசிஷ் மேத்தா மிகப் பெரிய புள்ளி ஆவார். இவரது வாடிக்கையாளர் பட்டியலில் மிக மிகப் பெரிய பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.
44 வயதான மேத்தா துபாயில் இருக்கிறார். இவர்தான் ஐபிஎல் கொச்சி விவகாரத்தில் சுனந்தாவுக்காக ஆஜராகாவுள்ளார். இவரது வாடிக்கையாளர் லிஸ்ட்டைப் பார்த்தால் பிரமிக்க வைக்கிறது. அவ்வளவு பெரிய பிரபலங்கள் எல்லாம் இவரது வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் மேத்தாவின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அதேபோல துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இவரது வாடிக்கையாளர்கள்தான். படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பூட்டோவின் குடும்ப நண்பரும் கூட.
இதுகுறித்து மேத்தா கூறுகையில், பெனாசிர் பூட்டோ எனக்கு மிகவும் நெருங்கிய தோழி ஆவார். அவரது குடும்பத்தினருக்கு நான் மிகவும் வேண்டப்பட்டவன். பூட்டோவின் மரணத்திற்குப் பிறகும் அவர்களுக்கும், எனக்குமான தொடர்புகள் வலுவாகவே உள்ளன. பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும், அவரது மகன் பிலாவலும் தொடர்ந்து என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
பெனாசிர் பூட்டோ குறித்து டாக்குமென்டரி படம் தயாரிக்க முயன்ற இந்திய தயாரிப்பாளர் ஒருவரை நான் தலையிட்டுத் தடுத்தேன் என்றார்.
டெல்லியில் பிறந்தவர் மேத்தா. கடந்த பத்து ஆண்டுகளாக சுனந்தாவை இவருக்குத் தெரியுமாம்.
சுனந்தாவுடனான தொடர்பு குறித்து மேத்தா கூறுகையில், சில காலமாக அவருடன் தொடர்பு இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டுதான் டெக்காம் நிறுவனத்தில் அவர் விற்பனை மேலாளராகப் பணியாற்றியபோது மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.
ஏப்ரல் 15ம் தேதி அவர் இந்தியாவிலிருந்து துபாய் திரும்பிய பின்னர், கொச்சி விவகாரம் குறித்து என்னுடன் ஆலோசனை நடத்தினார்.
சுனந்தாவுக்கும், தரூருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து அவர் என்னிடம் எதுவும் கூறியதில்லை. மீடியாக்கள் மூலம்தான் இது குறித்து எனக்குத் தெரியும்.
தன் மீதான குற்றச்சாட்டுக்களால் அவர் மனம் உடைந்து போய் விட்டார். பெரும் ஏமாற்றமடைந்தார். இதனால்தான் ரெண்டஸ்வஸ் நிறுவனம் தனக்கு அளித்த இலவசப் பங்குகளை திருப்பிக் கொடுக்க முன்வந்தார். தரூரின் அமைச்சர் பதவியைக் காக்கும் எண்ணம் அதில் இல்லை.
ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகள் என்பது ரெண்டஸ்வஸ் நிறுவனம், சுனந்தாவுக்கு சம்பளத்திற்குப் பதிலாக கொடுத்த பங்குகள்தான். இதில் சுனந்தாவின் முதலீடு என்று எதுவும் இல்லை. இது தொழில் முறையிலான ஒப்பந்தமே. உலகெங்கும் இது வழக்கத்தில் உள்ளதுதான்.
கிரிக்கெட் மீது காதல் கொண்டவர் சுனந்தா. மேலும், கேரளாவுக்கென்று ஒரு அணி வேண்டும் என அவர் விரும்பினார். அதனால்தான் அந்த முயற்சியில் ஈடுபட்ட ரெண்டஸ்வஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் செயல்பட்டார் என்றார் மேத்தா.
சுனந்தாவின் முன்னாள் கணவர் ஒரு ம்லையாளியாம். அவர் மூலம் சுனந்தாவுக்கு 18 வயது மகன் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
வக்கீல் மேத்தா கடந்த 20 வருடங்களாக துபாயில் இருக்கிறார். துபாயில் வசிக்கும் ஒரே அங்கீகரிக்கப்பட்ட இந்திய வக்கீல் இவர்தானாம். பல்வேறு நிறுவனங்களுக்காக இவர் ஆஜராகிறார்.
இந்தியா தவிர இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கோர்ட்களில ஆஜராகும் உரிமமும் இவருக்கு உள்ளது.
சல்மான் கான் மான் வேட்டை வழக்கில் சிக்கியபோது அவரது குடும்பத்தினர் இவரிடம் ஆலோசனை கேட்டனராம். அதேபோல கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கிய முகேஷ் கொச்சாருக்கும் இவர் உதவியுள்ளார். போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய அகீல் என்பவருக்கும் இவர்தான் வக்கீலாம்.
துபாயில் சொத்து வைத்துள்ள ஏராளமான இந்தியப் பிரபலங்களுக்கும் மேத்தாதான் வக்கீலாம்.