காவல் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள், குடிகாரர்களை விசாரிக்க தடை -ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவு
மதுரை: விசாரணைக்காக பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளாவது
கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இலங்கை பெண் பத்மாதேவியை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது தவறு.
அவரை வீட்டிலேயே வைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும் அல்லது மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, மகளிர் போலீஸ் அதிகாரி முன்பாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும். விசாரணை செய்ததை, வீடியோ காமிராவில் பதிவு செய்திருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் பெண்களையும், குழந்தைகளையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரும் பழக்கத்தை கைவிட கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறி தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவை, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி, தொடர்ந்து மூன்று நாள் ரோல்காலில் படித்து காண்பிக்க வேண்டும்.
குடிபோதையில் உள்ள குற்றவாளிகளை, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரக்கூடாது. அவர்களை கைது செய்யும் போது, அவரது உறவினர் ஒருவரையும் உடன் அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சான்றிதழ் வாங்கிக் கொண்டு, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த மார்ச் 5 ம் தேதி இரட்டை கொலை வழக்கு தொடர்பாக பத்மாதேவி என்ற பெண்ணை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில், பத்மாதேவி அடுத்த இரண்டு நாட்களில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன் நீதித்துறை நடுவரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், போலீசார் பாலியல் சித்ரவதை செய்ததால் விஷம் குடித்ததாக வாக்கு மூலம் அளித்திருந்தார்.
அதே போன்று ஏப்ரல் 4 ம் தேதி வடமதுரை போலீசார், குடிபோதையில் இருந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்த போது அவர் இறந்து விட்டார். இதனால் அவரது உறவினர்கள் வடமதுரை காவல் நிலையத்தை தாக்கியதோடு, மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களை முன் உதாரணமாக கொண்டு ஏ.டி.ஜி.பி. இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.