மும்பை கொல்கத்தாவிடம் தோற்றது எப்படி? – பால் தாக்கரே சந்தேகம்
மும்பை: தொடர்ந்து வெற்றி பெற்று வந்த மும்பை இந்தியன்ஸ் அணி திடீரென கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வியுற்றது எப்படி. அன்றைய போட்டியில் முன்னணி வீரர்களான டெண்டுல்கர், போலார்ட், லசித் மலிங்கா ஆகியோர் விளையாடாதது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
இதுகுறித்து பால் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், லலித்மோடி, சசி தரூர் இடையிலான மோதலால் ஜென்டில்மேன்களின் விளையாட்டு எனக் கூறப்பட்டு வந்த கிரிக்கெட்டுக்கு பெரும் கெட்ட பெயர் வந்து விட்டது.
கிரிக்கெட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் ஐபிஎல்லை முழுமையாக தடை செய்ய வேண்டும். உண்மையிலேயே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கிரிக்கெட் மீது அக்கறை இருக்குமானால் உடனடியாக பணத்தால் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கிய ஐபிஎல்லை தடை செய்ய வேண்டும்.
மோடி யார் அவர் என்ன பெரிய ஆளா. தற்போதைய சர்ச்சை எல்லாம் பணத்தைப் பற்றியதுதான். ஐபிஎல் 3வது தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் தீர விசாரிக்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மோசமான முறையில் தோல்வியுற்றது. மும்பை அணியின் முக்கிய வீரர்களான டெண்டுல்கர், லசித் மலிங்கா, போலார்ட் ஆகியோர் அன்றைய தினம் ஆடவில்லை. அது ஏன். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். கொல்கத்தா அணி வென்றது எப்படி என்பது விசாரிக்கப்பட்டே ஆக வேண்டும்.
ஐபிஎல் அணிகளில் பெருமளவில் பணத்தைக் குவித்துள்ள தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்றார் தாக்கரே.