ஐபிஎல் அணிகளின் முதலீடுகள், லாபம் குறித்து விசாரிக்க 8 குழுக்கள்
ஐபிஎல் கொச்சி விவகாரத்தைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமையகம், மோடியின் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. மேலும் மோடியையும் 8 மணி நேரம் அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த ரெய்டின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் தற்போது எட்டு குழுக்களை வருமான வரித்துறை அமைத்துள்ளதாம்.
ஐபிஎல் அணிகளின் உரிமையாளர் விவரங்கள், அவர்களின் பண முதலீடுகள், லாபங்கள் உள்ளிட்டவை குறித்து இந்தக் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே மோடியை நீக்குவதற்காக இன்று 2-வது நாளாக சசாங் மனோகர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். லலித்மோடி விவகாரத்தில் உடனடி தீர்வு கண்டுவிட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக உள்ளார்.
ஐ.பி.எல். அமைப்புக்கு வரும் நிதி, எங்கிருந்து, யாரால், எப்படி வருகிறது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியம் மீது விழுந்துள்ள கறையைத் துடைத்தால்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குஏற்பட்டுள்ள அவப் பெயரை துடைக்க முடியும் என வாரிய உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
ஐ.பி.எல். அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் வருகிற 26-ந்தேதி மும்பையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் லலித் மோடியிடம் பதவி விலகும்படி கூறப்படும். அவர் பதவி விலக மறுத்தால், குற்றச்சாட்டுக்களை உறுதி படுத்தும் நோட்டீஸ் வழங்கப்படும்.
அந்த குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்க கேட்டுக் கொள்ளப்படும். அதன் பிறகும் லலித்மோடி பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்து ஐ.பி.எல். நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.