ஜனாதிபதியிடம் விருது வாங்கியது போல சேலம் பெண் டாக்டர் மோசடி!
சென்னை: ஜனாதிபதியிடம் விருது வாங்குவது போல போட்டோ தயாரித்து மோசடி செய்த சேலம் பெண் டாக்டர், 6 மாதம் மருத்துவப் பணி செய்ய தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது.
இது குறித்து கவுன்சில்தலைவர் டாக்டர் கே.பிரகாசம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
உமா ரமேஷ் என்ற டாக்டர் டி.என்.பி தேர்வில் சிறந்து விளங்கியதற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் விருது பெற்றார்.
அவர் விருது பெற்ற புகைப்படத்தை நீக்கிவிட்டு சேலம் சிசு மருத்துவமனை டாக்டர் உமா பாரதி தனது படத்தை கிராபிக்ஸ் மூலம் ஒட்டி தான் விருது பெற்றதுபோல மோசடி செய்துள்ளார்.
மேலும் அந்தப் படத்தை விளம்பரம் செய்தும், துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், டாக்டர் உமா பாரதிக்கு விளக்கம் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு டாக்டர் உமா பாரதி அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை.
இந் நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் செயற்குழு பரிந்துரையை ஏற்று டாக்டர் உமா பாரதி 6 மாதம் மருத்துவத் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.