பாக். அரசின் பிராண்ட் அம்பாசடர்களாக சானியா – சோயப் நியமனம்
டெல்லி: சானியா மிர்ஸாவும், அவரது கணவர் சோயப் மாலிக்கும் பாகிஸ்தானுக்குத் திரும்பியதும், அவர்களை பாகிஸ்தான் அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்ட பிராண்ட் அம்பாசடர்களாக நியமிக்கப் போவதாக அந்த நாட்டு மக்கள் தொகைப் பெருக்க கட்டுபாட்டுத்துறை அமைச்சர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த அசோசம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பிர்தோஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சானியாவும், சோயப்பும் பாகிஸ்தான் திரும்பியதும், ஒரு விழா நடத்தி அவர்கள் இருவரையும் பாகிஸ்தான் அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு திட்டத்தின் பிராண்ட் அம்பாசடர்களாக அறிவிக்கவுள்ளோம்.
மும்பை குண்டுவெடிப்புக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு இறுகிப் போயிருந்தது. சானியா, சோயப் திருமணத்தின் மூலம் அது தற்போது இளக்கமடைந்துள்ளது.
எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்காக சானியா டென்னிஸ் ஆடுவாரா, மாட்டாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய முடியும்.
27ம் தேதி பாக்.கில் வரவேற்பு
இதற்கிடையே சோயப்பின் பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து சானியாவும், சோயப் மாலிக்கும் பாகிஸ்தான் கிளம்பவுள்ளனர். அவர்களது திருமண வரவேற்பு லாகூரில் வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளதாக சோயப்பின் மைத்துனர் இம்ரான் ஜாபர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், லாகூரில் 27ம் தேதி திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சோயப்புக்குப் பாஸ்போர்ட் கிடைத்து விட்டதால் அவர் சானியாவுடன் கிளம்புகிறார். சியோல்கோட்டில் அவர்களுக்கு 25ம் தேதி வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் லாகூரில் உள்ள ஹோட்டலில் வரவேற்பு பிரமாண்டமான முறையில் நடைபெறும் என்றார்.