நாடாளுமன்றத்தில் ஒரு வருடமாய் அழகிரியைப் பார்க்க முடியவில்லை- பாஜக கிண்டல்
இன்றைய விவாதத்தின்போது அழகிரி சபையில் இல்லாததால்,பெரும் அமளியும் ஏற்பட்டது.
இன்று லோக்சபாவில் உரம் மற்றும் ரசாயணத்துறை தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அழகிரி அங்கு இல்லை. அவர் மாலத்தீவில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ்,
தற்போதைய மக்களவை ஒரு ஆண்டு முடிய உள்ள நிலையில், எம்பிக்களில் பெரும்பாலானோர் அழகிரியை இதுவரை பார்த்ததில்லை.
கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் வெளிநாடு சென்றுள்ளது குறித்து அழகிரி மக்களவைத் தலைவரிடம் அனுமதி வாங்கியுள்ளாரா.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்கூட அவர் கலந்துகொள்வதில்லை என்பதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
சுஷ்மா சுவராஜின் பேச்சை பாஜக உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதாதள உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.
அப்போது எழுந்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அழகிரி தற்போது வெளிநாட்டில் உள்ளார். பொதுவாக அமைச்சர் அவையில் இருக்க வேண்டும் என்றாலும், அவர் இல்லாதபோது மக்களவை விதிப்படி கேள்விகளுக்கு ஜூனியர் அமைச்சர் பதிலளிக்கலாம் என முகர்ஜி தெரிவித்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளிக்க மக்களவைத் தலைவர் அனுமதி அளித்தார்.