ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மோடிக்கு ஆதரவு- சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் மட்டும் ‘பம்முவது’ ஏன்?
சென்னை: ஐபிஎல் மோதல் கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கு வந்து விட்டது. மோடியை தூக்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால் அவருக்கு ஆதரவாக கிட்டத்தட்ட அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் திரண்டுள்ளனர். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் மட்டும் மோடிக்கு எதிராக, கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுடன் இணைந்து தனி அணியில் நிற்கிறார்.
ஐபில் இரண்டாக பிளவுபடும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. இந்திய கிரிகெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டதுதான் ஐபிஎல். அதை திறம்பட நிர்வகிப்பதற்காக தனி தலைவரை நியமித்தது.
வளர்த்து விட்ட பிசிசிஐக்கே பெரும் சவாலாக மாறிப் போயுள்ளார் ஐபிஎல் தலைவர் லலித் மோடி. இப்போது நிலைமை எப்படி மாறியுள்ளது என்றால் பிசிசிஐ vs ஐபிஎல் என்றாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கிட்டத்தட்ட அத்தனை பேரும் மோடிக்கு எதிராக திரண்டுள்ளனர். அதேபோல ஐபிஎல்லின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் (ஐ.எஸ்.பிந்த்ராவைத் தவிர-மொத்தம் 14 உறுப்பினர்கள்) மோடிக்கு எதிராக உள்ளனர்.
அதேசமயம், ஐபிஎல் அணிகளின் ஒட்டுமொத்த உரிமையாளர்களும் மோடிக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர். இது மோடிக்கு பெரிய பலமாக அமையும் என கருதப்படுகிறது.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் என்.சீனிவாசன் மட்டும் மோடிக்கு எதிரான வரிசையில் இடம் பெற்றுள்ளார்.
சீனிவாசனின் நிலையும் கூட பெரும் சர்ச்சைக்குரியதே. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கிறார் சீனிவாசன். முன்பு இவர் பொருளாளராக இருந்தார். அப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இவர் ஏலத்தில் எடுத்தார்.
இதை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஏ.சி.முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கிரிக்கெட் வாரியத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள சீனிவாசன், ஐபிஎல் அணியை வாங்கியது தவறு என்று கோரியிருந்தார். ஆனால் இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை டிஸ்மிஸ் செய்ததோடு, முத்தையாவுக்கு அபராதமும் விதித்தது.
கிரிக்கெட் வாரிய செயலாளராக உள்ள சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும், ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இப்படி பல பதவிகளை கையில் குவித்து வைத்துள்ள ஒரே நபர் சீனிவாசன் மட்டுமே. மூன்று பவர் புல் பொறுப்புகளை இப்படி தாராளமாக இவருக்கு எப்படி அள்ளிக் கொடுத்தனர் என்று தெரியவில்லை.
மேலும் கிரிக்கெட் வாரிய செயலாளராக உள்ள சீனிவாசன் பகிரங்கமாக கிரிக்கெட் அணி ஒன்றின் உரிமையாளராக இருக்கும்போது மோடி, மறைமுகமாக சில அணிகளின் பங்குதாரராக இருக்கக் கூடாதா என்ற கேள்விகளையும் மோடி ஆதரவாளர்கள் எழுப்பக் கூடும் என்று தெரிகிறது.
கிரிக்கெட் வாரியத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பதால்தான் மோடிக்கு ஆதரவான நிலையை சீனிவாசன் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
சீனிவாசன் இரு பதவிகளை வகிப்பது சட்டப்படி தவறல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டபோதிலும் கூட, ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர், கிரிக்கெட் வாரியத்திலும், ஐபிஎல்லிலும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பதால் அதுவும் தற்போது முனுமுனுப்பை எழுப்பியுள்ளது.