விடைத்தாள் மாயம்-மறு தேர்வு எழுதிய 262 மாணவர்கள்
சென்னை: முசிறியில் பிளஸ்-2 இயற்பியல் தேர்வு எழுதிய 262 மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போனதையடுத்து இன்று அவர்கள் மறு தேர்வு எழுதினர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி பிளஸ்-2 இயற்பியல் தேர்வுகள் நடந்தன. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். ஆனால், அவர்களது விடைத்தாள் கட்டு காணாமல் போய்விட்டது.
இதையடுத்து 262 மாணவ, மாணவிகளுக்கு மட்டும் ஏப்ரல் 22ம் தேதி அதே பள்ளியில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று அதே மையத்தில் மறுதேர்வு நடந்தது.
முசிறி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுடன் (பதிவு எண் 470272 முதல் 470375 வரை (470274, 470308, 470342 தவிர) அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் (பதிவு எண் 469874 முதல் 469951 வரை (469879 தவிர), தண்டலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் (பதிவு எண் 469968 முதல் 470052 வரை (470045 நீங்கலாக) இந்தத் தேர்வை எழுதினர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?:
இந் நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.