ஐபிஎல் சர்ச்சையில் தொடர்பு- பிரபுல் படேல் பதவி பறிக்கப்படுமா? – பிரதமர் ஆலோசனை
ஐபிஎல் விவகாரம் நாளுக்கு நாள் படுமோசமாக நாற ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு ஊழல் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்ச்ர் பிரபுல் படேல் மற்றும் சரத் பவார் ஆகியோரின் தொடர்புகளும் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளன. இருவரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுல் படேலின் மகள் பூர்ணா. இவர் ஐபிஎல் விருந்தினர் உபசரிப்புப் பிரிவு மேனேஜராக இருக்கிறார். இவருக்கு ஐபிஎல்லின் தலைமை செயலதிகாரி சுந்தர் ராமன், மார்ச் 19 தேதி ஒரு இமெயில் அனுப்பியிருந்தார். அதில், கொச்சி அணியை வாங்குவதற்காக இந்த்த் தொகையை கோட் செய்யுமாறு கூறியிருந்தார்.
இந்த மெயிலை தனது தந்தையின் செயலாளரான சம்பா பரத்வாஜுக்கு மெயில் செய்தார் பூர்ணா. அதை அவர் தரூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து அந்தத் தொகையை கோட் செய்து ரெண்டஸ்வஸ் நிறுவனம் ஏலம் கேட்டு கொச்சி அணியை வென்றது.
இதேபோல சரத் பவாரின் மருமகன் சதானந்த் சுலேவுக்கு, ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் 10 சதவீத பங்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல்களை பிரபுல் படேலும், பவாரின் மகள் சுப்ரியா சுலேவும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இருப்பினும் இதுதொடர்பான ஆதாரங்கள் வெடித்துக் கிளம்பி வருவதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து நேற்று அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தார். மேலும், ஐபிஎல் அணிகளின் அலுவலகங்களில் நாடு தழுவிய அளவில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு குறித்தும் அவர் விவரித்தார்.
கொச்சி அணி விவகாரம் தொடர்பாக தரூருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டபோது அவர் பதவி விலகினார். அதேபோல தற்போது சிக்கியுள்ள பிரபுல் படேல் விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரபுல் படேலுக்கு எதிரான ஆதாரங்கள் திட்டவட்டமாக வெளியானால் விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் முக்கியமான கூட்டணி கட்சி என்பதால் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் காங்கிரஸ் கட்சி குழப்பமடைந்துள்ளது.