புளியங்குடியில் எலுமிச்சை விலை வீழ்ச்சி!
புளியங்குடி: புளியங்குடி எலுமிச்சை மார்கெட்டில் எலுமிச்சை பழங்களின் விலை திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும், எலுமிச்சை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதால் மருத்துவ பயன்பாட்டிற்கும், சோப்புகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதால் எப்போதுமே தேவை அதிகமாக இருக்கும்.
இவற்றை விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்யமுடியாமல் இடைதரகர்கள் மூலமாக விற்பனை செய்கின்றனர். மேலும் தமிழகத்தில் எலுமிச்சை பழத்தி்ற்கு என்றே பிரத்யேகமான மார்க்கெட் புளியங்குடியில் மட்டுமே உள்ளது.
மற்ற பகுதிகளில் எடை போட்டு எலுமி்ச்சை பழங்கள் விற்பது வழக்கம். இங்கு மட்டும் எண்ணிக்கையின் அடிப்படையில் எலுமிச்சை பழங்கள் விற்கப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் சீரான விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கடந்த 2007ம் ஆண்டு ஏற்பட்ட சூறவாளிகாற்றில் இப்பகுதியில் ஏராளமான மரங்கள் பாதிப்படைந்தன. மேலும் போதிய பருவ மழை இல்லாததாலும், கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவி்த்து வருகின்றனர்.
இந்நிலையி்ல் புளியங்குடி மார்க்கெட்டில் எலுமி்ச்சை விலை திடீர் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 1000 பழங்கள் 2500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்வதால் திடீரென விலை வீழ்ச்சியடைந்தது. ஆயிரம் பழங்கள் 1500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் எலுமி்ச்சை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.