டிராவல்ஸ் நிறுவன மோசடியால் சிம்லாவில் சிக்கித் தவிக்கும் தமிழக பயணிகள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சிம்லாவுக்கு சுற்றுலா சென்ற பயணிகள், டிராவல்ஸ் நிறுவனம் மோசடி செய்து விட்டதால் ஹோட்டலுக்குப் பில் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றனர்.
கடந்த 17-ந்தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து 44 பேர் புறப்பட்டு சென்றனர். டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 44 பேருக்கு சேர்த்து மொத்தம் 15 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்ட டிராவல்ஸ் நிறுவனம் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்திருந்தது.
சுற்றுலா சென்ற அனைவரும் சிம்லாவில் உள்ள அஜ்மால் ரெசிடென்சி லாட்ஜில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை 6 மணிக்கு 44 பேரும் அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்தை சுற்றிப்பார்க்க செல்ல வேண்டும். இதற்காக அறையை காலி செய்தபோது ஓட்டல் நிர்வாகத்தினர் இவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
நீங்கள் தங்கியதற்கான ரூ.45 ஆயிரம் கட்டணத்தை டிராவல்ஸ் நிறுவனம் கட்டவில்லை. பணத்தை கட்டிய பிறகுதான் நீங்கள் வெளியில் செல்ல முடியும் என்று கூறிவிட்டனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகளிடம் போன் செய்து கேட்டபோது சரியான பதில் வரவில்லை. இதனால் 44 பேரும் சிம்லாவில் தவித்து வருகிறார்கள்.