கருணாநிதி, ப.சிதம்பரத்துக்கு ராஜபக்சே எவ்வளவோ மேல்: சீமான்
புதுக்கோட்டை: முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ராஜபக்சே எவ்வளவோ மேல் என்று கூறியள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்.
புதுக்கோட்டையில், பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்,
சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயைத் திருப்பி அனுப்பியது தெரியாமல் நடந்த நிகழ்வல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். மத்திய உள்துறை அமைச்சருக்கு தெரியாமல் இது நடந்திருக்கவே முடியாது. பார்வதி அம்மாள் வந்தது தனக்குத் தெரியாது என முதல்வர் கூறுவது அவருக்கு மிகப் பெரிய அவமானம்.
பார்வதி அம்மாளுக்கு சுயநினைவு கிடையாது, அவருக்கு நினைவு இருந்திருந்தால் நிச்சயம் தமிழகத்துக்கு வந்திருக்கமாட்டார்.
சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பிய இதே அரசுதான் ராஜபக்ஷவின் இரு மகன்களையும் அதே விமான நிலையத்தில் படை பரிவாரங்களுடன் வரவேற்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய அனுப்பி இருக்கிறது.
தமிழினம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. நமது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இச்சூழலை வென்றெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதுதான் நாம் தமிழர் இயக்கம். எனவே தமிழர்களுக்கான அரசை விரைவில் நிறுவ அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் சீமான்.