மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக சானியா, சோயப், ஆயிஷா மீது வழக்கு
ஹைதராபாத்தைச் சேர்ந்த மஜ்லிமன்-ஏ உன்னதே முகமதி என்ற அமைப்பின் தலைவர் மவுசின் பின் உசேன் அல்கசாரி ஹைதராபாத் கோர்ட்டில் சோயிப் மாலிக், சானியா மிர்சா, ஆயிஷா உள்பட 14 பேர் மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், சோயிப் மாலிக் முதலில் ஆயிஷாவை திருமணம் செய்யவில்லை என்று நாடகம் ஆடினார். பின்னர் திடீரென ஆயிஷா முதல் மனைவி என்பதை ஒப்புக் கொண்டு விவாகரத்தும் செய்தார்.
ஆயிஷாவின் தந்தை சித்திக்கி ஒருபடி மேலே போய் சோயிப் மாலிக்கால் என் மகளின் வாழ்க்கையே நாசமாகி விட்டது. அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பத்திரிகை, டி.வி.க்களில் பேட்டி கொடுத்தார்.
இதையடுத்த ஆந்திர அமைச்சர் ரகமதுல்லா, ரசூல்கான் போன்றோர் தலையீட்டு சமரசப்படுத்தினர். அப்போது என்ன பேரம் நடந்தது என்பது புரியாத புதிராக உள்ளது. இவர்களது இந்த திருமண விவகாரம் எங்களின் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது.
எனவே மாலிக், சானியா, அவரது பெற்றோர், ஆயிஷா, அவரது பெற்றோர், ரகமத்துல்லா, ரசூல்கான், திருமணத்தை நடத்திய 2 காஜிக்கள் உள்பட 14 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சானியா-சோயிப் மாலிக் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தர விட்டார். இதையடுத்து பஞ்சராஹில்ஸ் உதவி கமிஷனர் ரவீந்தர் ரெட்டி 14 பேர் மீதும் மத உணர்வை புண்படுத்தியதாக 295 ஏ பிரிவின்படி கீழ் வழக்குப்பதிவு செய்தார்.