2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணையை சந்திக்கத் தயார்: ஆ. ராசா
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கூறினார்.
2-ஜி அலைக்கற்றை உரிமத்தை மிகக் குறைந்த விலைக்கு அளித்ததால் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.
மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தற்போது சிபிஐ வழக்கு உள்ளது. இதுகுறித்து எவ்வித விசாரணையையும் சந்திக்கத் தயாராக உள்ளேன்.
சிபிஐ கோரும் அனைத்து தகவல்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, தேவையான ஆவணங்களை அளிக்கவும் எனது துறை தயாராக உள்ளது.
தற்போது 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏல நடைமுறை முற்றிலும் வெளிப்படையானதாக நடத்தப்படுகிறது. மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் பிற துறைகள் ஏல நடைமுறையைக் கண்காணிக்கின்றன.
3-ஜி ஒதுக்கீடானது அரசின் கொள்கை முடிவில் ஒன்றாகும். இருப்பினும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சில சமூக பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கடமையும் உள்ளது.
தாமதம் ஏன்?:
3-ஜி ஏல நடைமுறை கால தாமதமானதற்கு ரேடியோ அலை வரிசை கிடைக்காததும், இத்துறையில் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததும் காரணமாகும்.
மேலும் கைவசம் உள்ள அலைக்கற்றை அளவு,இதில் ஒதுக்கீடு செய்ய வேண்டிய அளவு, நிர்ணயிக்க வேண்டிய தொகை போன்றவற்றை முடிவு செய்யவேண்டியிருந்ததன் காரணமாக ஏலம் தாமதமானது.
மேலும் அமைச்சர்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட குழு கடந்த ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது 3-ஜி ஏலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்குழு பலமுறை கூடி விவாதித்தது. இறுதியில் 3 கட்டங்களாக 17 சேவை பிராந்தியங்களில் இதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இம்மாதம் 9-ம் தேதி ஏலம் தொடங்கியுள்ளது.
3-ஜி ஏலம் மூலம் ரூ. 35 ஆயிரம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் நிறுவனங்களின் அதிக ஆர்வம் காரணமாக ரூ.45 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேநேரம் தற்போது 2-ஜி மற்றும் 3-ஜி தொடர்பாக பொதுமக்களிடையே குழப்பம் நிலவுவது உண்மைதான். விரைவில் இந்தக் குழப்பங்கள் நீங்கும் என்றார் அமைச்சர் ராசா.