ஐபிஎல் அணிகள் குறித்த ஆவணங்கள் – வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்த பிசிசிஐ
மும்பை: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனின்படி, எட்டு ஐபிஎல் அணிகள் குறித்த அனைத்து முக்கிய ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
எட்டு அணிகள் குறித்த அனைத்து ஆவணங்களும் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாம். வீரர்கள் ஏலம், ஒவ்வொரு அணியிலும் யார் யாருக்கு பங்கு உள்ளது. ஏல நடைமுறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் தகவல்களையும் ஒரிஜினல் ஆவணங்களோடு ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் அனுப்பிய சம்மனை ஏற்று அதில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்த ஆவணங்களையும் கிரிக்கெட் வாரியம் ஒப்படைத்துள்ளது என்றார்.
கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐபிஎல் தலைமை செயலதிகாரி சுந்தர் ராமன், ஐபிஎல் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி வரும் இன்டர்நேஷனல் மேனேஜ்மென்ட் குரூப் சார்பில் சில அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து இந்த ஆவணங்களை அளித்தனர்.
இந்த சந்திப்பின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து இரு தரப்பும் தெரிவிக்கவில்லை.
ஏப்ரல் 16ம் தேதி கிரிக்கெட் வாரியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்றைக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.