நிதி மோசடி: குமுதம் பதிப்பாசிரியர் வரதராஜன் கைது!
சென்னை: தமிழின் பிரபல பத்திரிகை நிறுவனமான குமுதம் குழுமத்தின் பதிப்பாசிரியர் பி.வரதராஜன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
நிதி மோசடி, நிர்வாக முறைகேடுகள் போன்ற குற்றங்களின் அடிப்படையில், குமுதம் நிறுவன ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.
குமுதம் நிறுவனத்தின் பதிப்பாளராக இருந்த மறைந்த பிவி பார்த்தசாரதியின் மகன்தான் வரதராஜன். குமுதத்தின் மேனேஜராக இருந்து, பார்த்தசாரதி மறைவுக்குப் பின்னர் பதிப்பாளரானார்.
குமுதத்தை நிறுவிய ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலையின் மகன்தான் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். இவர்தான் குமுதம் உள்ளிட்ட அதன் குழும இதழ்களின் நிறுவன நிர்வாக ஆசிரியர். குமுதம் குழும இயக்குநராகவும் உள்ளார்.
குமுதத்தை முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வரதராஜன் முயற்சித்ததாகவும், அதற்காக ஆசிரியர் குழு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குமுதம் நிறுவன உரிமையாளர் என்ற வகையில் குற்றச்சாட்டை அளித்துள்ளார் ஜவஹர் பழனியப்பன்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட வரதராஜன், சில மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடப்பட்டார்.
அவர் மீது 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.