புரோக்கர்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்ட ரயில் நிலையங்கள்
தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் கடந்த 21ம் தேதியோடு முடிவடைந்ததை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
ஊர்களுக்கு வர பேருந்துகளை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.இதனால் ரயிலுக்கு முன்பதிவு செய்ய பலர் தங்கள் பகுதி ரயில் நிலையங்களை விட்டு விட்டு நெல்லை, தென்காசி, வள்ளியூர், திருச்செந்தூ்ர், தூத்துக்குடி, மணியாச்சி, ராஜபாளையம், செங்கோட்டை, சங்கரன்கோவில் என்று அலைந்து முன்பதிவு செய்தால் அங்கு காத்திருப்போர் பட்டியல் 150 முதல் 200ஐ தாண்டுகிறது. சரி தட்கல் டிக்கெட் போடலாம் என்றால் அதுவும் காத்திருப்போர் பட்டியலில் 50ஐ காட்டுகிறது. 2ம் வகுப்பு இப்படி என்றால் ஏசி பெட்டிகளிலும் 20 முதல் 30வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.
மேற்கண்ட ரயி்ல் நிலையங்களில் தட்கல் டிக்கெட்டுகளுக்காக கூட்டம் அலைமோதும் ரயில் நிலையங்களில் நெல்லை, தென்காசி, செங்கோட்டைதான் முதலிடத்தில் இருக்கிறது. தட்கல் டிக்கெட் பெறுவதற்கு முதல் நாள் இரவே பயணியோ, பயணியின் உறவினரோ உணவு பொட்டலம், தண்ணீர் பாட்டிலோடு ராத்திரியே வந்து காத்து கிடந்து கவுண்டர் திறந்ததும் முண்டியடித்து செல்வதற்குள் அங்கு தட்கல் டிக்கெட்டும் காலியாகி விடுகிறது.
தட்கல் டிக்கெட்டுகளை பெறுவதற்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதை பார்க்கும் சில புரோக்கர்கள் அதனை பயன்படுத்தி முன்னதாகவே இடம் பிடித்து காத்திருக்கும் பயணிகளிடம் லேசாக பேச்சு கொடுத்து ஒரு டிக்கெட் ரூ.100 முதல் 200 வரை கமிஷன் பேசி காரியத்தை முடித்து விடுகின்றனாராம்.
இந்த புரோக்கர்கள் யார் முன்பதிவு பிரிவில் உள்ளார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களை சரிகட்டி தட்கல் டிஸ்பிளே டிஜிட்டல் போர்டை ஆப் செய்ய வைத்து முன்னதாகவே கவுண்டர் உள்ளேயே தேவையான தட்கல் டிக்கெட்டுகளை அடித்து விடுகின்றனர் என்றும் இதனால் அப்பாவிப் பயணிகள் பாதிக்கப்படுவதாக குமுறல் எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, அதை ஏன் கேட்கீறிங்க, நெல்லையை பொறுத்தவரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ஆள் பிடித்து எம்பிக்களிடம் ஈக்யூ எனப்படும் எமர்ஜென்சி கோட்டா படிவம் வாங்கி பேக்ஸ் மதுரைக்கு அனுப்பினாலும், அவர்கள் அதை கண்டு கொள்வது கிடையாது.
காரணம் சில புரோக்கர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்த படிவங்களுக்கு கிடையாது. மேலும் உயர் அதிகாரிகளுக்கு கூட டிக்கெட் கிடைக்காமல் நெல்லையில் இருந்து காரில் சென்னைக்கு போன சம்பவங்கள் உள்ளன.
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் இப்படி செய்வது கிடையாது. தற்போது பணிபுரியும் சில புக்கிங் கிளார்குகளே போர்ட்டர்களை அழைத்து தட்கல் டிக்கெட்டுகளை தட்டி பறிக்கின்றனர். விஜலென்ஸ் சோதனை போட்டால் புக்கிங் கிளார்க்குள் முதல் போர்ட்டர்கள் வரை அனைவரிடமும் 1 முதல் 5 டிக்கெட்டுகள் இருக்கும். சில டிக்கெட் பரிசோதகர்கள் இத்தொழிலை செய்கின்றனர் என்றார்.
ரயில்வே நிலைய மேலாளர் ஓருவரிடம் கேட்டபோது,
தட்கல் டிக்கெட் ஆதிக்கத்தில் யாரெல்லாமோ சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று நான் யாரை குற்றம் சொல்ல முடியும். என் மகனுக்கு சென்னைக்கு செல்ல காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. கேட்டால் கவலைப்படாதீர்கள் என்றனர்.
ஓதுக்கீடு பட்டியல் முடிந்த பின்பும் அதே நிலைதான். அவனுக்கும், எனக்கும் வீட்டில் சண்டை வரும் அளவுக்கு பிரச்சனையாகிவிட்டது. இப்பிரச்சனைகள் தீருவதற்கு மதுரையில் ஓதுக்கீடு செய்யப்படுவதை நிறுத்தி அந்தந்த ரயில் நிலையங்களில் இத்தனை ஓதுக்கீடு என்ற முறை வந்தாலே இப்பிரச்சனை வராது. மதுரையில் காமர்ஷியல் பிரிவுதான் ஓதுக்கீடுகளை முடிவு செய்ய வேண்டும். அதனை முதலில் சரி செய்ய கூடுதலை பெட்டிகளை இணைத்தாலே போதும் என்றார்.
மேலும் சிலரிடம் விசாரித்ததில் நெல்லையில் ஓருபுள்ளி தான் முழுமையாக ஓத்துழைப்பு கொடுத்து அனைத்து பணிகளையும் செய்வாராம். அவருக்குதான் மதுரை காமர்ஷியல் பிரிவு அதிகம் பாசம் காட்டுவதும், அதனை தொடர்ந்து நெல்லை ஜங்ஷன், ரயில் நிலைய அதிகாரிகளும், விசுவாசம் காட்டுவதுண்டாம்.
இது போக சில ரயில்வே போலீசாரும், புரோக்கர்களோடு கைகோர்த்து கொண்டு தட்கல் டிக்கெட்டுகலுக்கு காத்திருக்கும் பயணிகளை இரவோடு இரவாக விரட்டி விட்டு காலையில் வருமாறு கூறுவதும் மு்க்கியமான நாட்களில் நடப்பதுண்டாம்.
தென்மாவட்ட மக்கள் அதிகம் நேசிக்கும் ரயில்வே பயணத்தை அறுவறுக்கத்தக்கதாகவும், அகம் வேதனை படும் அளவுக்கும் மாற்றும் அதிகாரிகளை என்ன சொல்ல...