தென்காசி அருகே வீரன் அழகுமுத்துகோன் உருவ படம் மீது தார்பூச்சு
குற்றாலம்: வீரன் அழகுமுத்துகோன் உருவ படத்தின் மீது விஷமிகள் தார் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் இன்று யாதவ மகாசபை (ஓய்எம்எஸ்)யின் மாநில மாநாடும், மாவீரன் அழகுமுத்துகோன் சிலை திறப்பு விழாவும் நடைபெறுகிறது. இதனையொட்டி குற்றாலம் காசிமேஜர்புரத்திலும் யாதவ இளைஞர் அணி மற்றும் யாதவ சமுதாயம் சார்பில் அழகுமுத்துகோன் உருவபடமும், சுவர் விளம்பரமும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று யாரோ சில விஷமிகள் அந்த படத்தில் மேலிருந்து கீழ்வரை தாரை ஊற்றி விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை அதனை பார்த்த யாதவ சமுதாய பிரமுகர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பொறுப்பு அசோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முணியாண்டி, மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு அந்த படத்தை உடனடியாக வெள்ளையடித்து சரிசெய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.