தவறான சிகிச்சை: ரஷ்யாவிலிருந்து சுய நினைவின்றி திரும்பிய சென்னை பெண்
சென்னை: ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ். படிப்பு படிக்கச் சென்ற சென்னை பெண்ணுக்கு அங்கு டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் சுயநினைவற்ற நிலையில் தமிழகம் திரும்பியுள்ளார்.
சென்னை கொரட்டூரை சேர்ந்த ரவிக்குமார்-சுபத்ரா தம்பதியின் இளைய மகளான நிவேதாவுக்கு (19) கடந்த 2008ம் ஆண்டு தனியார் ஏஜெண்ட் மூலம் ரஷ்யாவின் கிளாஸ்நாஸ்ட் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்தது.
இதையடுத்து ரஷ்யா சென்று அந்தக் கல்லூரியில் சேர்ந்தார்.
ஒருநாள் வயிற்றுவலி காரணமாக ரஷ்ய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்ண்டிசைடிஸ் (குடல்வால் நோய்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால், அறுவை சிகி்ச்சை முடிந்த பின்னரும் அவரை சக மாணவிகள் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது சக மாணவிகள் விசாரித்தபோது, அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து அதிகமாக கொடுத்ததில் நிவேதா சுயநினைவை இழந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இதுகுறித்து சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு அந்த மாணவிகள் தகவல் தந்தனர்.
இகையடுத்து பெற்றோர் ரஷ்யாவுக்கு விரைந்து அங்கு மருத்துவமனையில் மகளைப் பார்ந்தபோது அதிர்ந்து போயினர்.
பல நாட்களாக சுயநினைவு இழந்த நிலையில் நிலைகுலைந்து கிடந்தார் நிவேதா.
இதையடுத்து திமுக முன்னாள் எம்.பி. செ.குப்புசாமியின் உதவியுடன் நிவேதாவை டெல்லிக்குக் கொண்டு வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு 20 நாள் சிகிச்சைக்குப் பிறகும் கோமா நிலையிலேயே இருந்த அவரை விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்து அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் லன்னை லைப்லைன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப்போதும் அவருக்கு சுய நினைவு திரும்பவில்லை.
இதுவரை ரூ.20 லட்சம் வரை செலவளித்துவிட்டாலும் நிவேதா குணமடையவில்லை.