கேரள சிறுமியின் வாயிலிருந்து தொடர்ந்து வரும் புழுக்கள்
திருப்பூர்: கேரளாவைச் சேர்ந்த ஜோதிமணி –பிந்து தம்பதியின் 5 வயதுமகள் காயத்ரியின் வாயிலிருந்து தொடர்ந்து புழுக்கள் வெளியாவதால் அந்த சிறுமி பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறாள்.
ஜோதிமணி பிந்து தம்பதிக்கு காயத்ரி தவிர ராஜா என்ற மகன் உள்ளார். கோழிக்கோட்டில் வசித்து வருகிறார்கள்.
ஜோதிமணி திருப்பூர் காலேஜ் ரோடு அணைப் பாளையம் புளியந்தோட்டத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து இருந்தார்.
அங்கு அவரது மகள் காயத்ரி வயிற்று வலியால் துடித்தாள். சாப்பாடு கொடுத்தால் வாந்தி வந்தது. அப்போது சுமார் 12 செ.மீ. முதல் 25 செ.மீ வரை உள்ள புழுக்கள் வெளியே வந்தது. தொடர்ந்து இவ்வாறு வந்து கொண்டிருந்தது. மலம் கழிக்கும் போதும் சிறுமி காயத்ரி மிகவும் அவதிப்பட்டாள்.
அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து மூலம் மலம் வழியாக புழுக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில்,
குடிசை பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் ரோட்டில் விளையாடும். பின்னர் கை, கால்களை சுத்தம் செய்யாமல் வீட்டுக்கு வரும். தாய்மார்கள் அக்குழந்தைக்கு சோறு ஊட்டுவார்கள். வீட்டில் சுத்தம் இல்லாத இடத்தில் சோறு கீழே விழும் அதனையும் சேர்த்து ஊட்டி விடுவார்கள்.
அதனால் தான் இது போன்ற புழுக்கள் உருவாகிறது. இதற்கு அல்காயிஸ்லம்ரி காய்ட்ஸ் என்று பெயர். சிறுமியின் உடலில் இருந்து 40 புழுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புழுக்கள் எல்லோருக்கும் ஏற்படும். குழந்தைகளுக்கு தான் அதிக அளவு பாதிப்பு இருக்கும்.
இந்த புழுக்கள் 35 செ.மீ. வரை வளர கூடியது. மண் புழு போல் உடலில் எல்லா பாகங்களுக்கும் செல்லும். இந்த சிறுமிக்கு தொண்டைக்குழிக்குள் வந்து விட்டதால் வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த புழுக்கள் ரத்தத்தை குடிக்க கூடியது.
தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் ரத்தத்தை குடித்து ரத்த சோகையை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மை உடையது. முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை உடையது.
எனவே குழந்தைகளை சுத்தமாக இருக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.