பிசிசிஐ புகாருக்கு மறுப்பு -பங்குதாரர்கள் பட்டியலை வெளியிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ்
கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டே ராஜஸ்தான் அணி ஏலம் எடுக்கப்பட்டதாகவும், இதில் எந்தவித முறைகேடும், விதிமீறலும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ள பங்குதாரர்கள் பட்டியல்....
இங்கிலாந்தைச் சேர்ந்த எமர்ஜிங் மீடியா ஐபிஎல் நிறுவனத்தின் தலைமையிலான, இஎம் ஸ்போர்ட்டிங் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் நிறுவனம் ஏலம் எடுக்கப்பட்டது.
இதில், லலித் மோடியின் மச்சான் சுரேஷ் செல்லாராமின் டிரெஸ்கோ இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனத்திற்கு 44.2 சதவீத பங்குகள் உள்ளன. எமர்ஜிங் மீடியா நிறுவனத்தின் மனோஜ் பதலேவுக்கு 32.4 சதவீத பங்குகள் உள்ளன. லாச்லன் முர்டோச்சின் ப்ளூ வாட்டர்எஸ்டேட் நிறுவனத்திற்கு 11.7 சதவீத பங்குகளும், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 11.7 சதவீத பங்குகளும் உள்ளன. வேறு பங்குதாரர் யாரும் இதில் இடம்பெறவில்லை.
எங்களது அணி குறித்து தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்தே பங்குதாரர் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஏலம் வெற்றிகரமான ஒன்றாகும். இதில் எந்தவிதமான விதி மீறலும் இடம் பெறவில்லை. ஏலம் எடுத்த நிறுவனம், அதன் பங்குதாரர்கள் உள்ளிட்டவை குறித்த விவர ஆவணம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளோம். எங்களது விவரங்கள் அனைத்தும் தெளிவானவை.
எங்களது அணியுடன் ஜெய்ப்பூர் ஐபில் கிரிக்கெட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதிதான் இணைத்துக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்த்த்தை அதே ஆண்டு ஏப்ரல் 14ம்தேதி மேற்கொண்டோம்.
அதற்கு இடையில் உரிமையாளர் தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் மாற்றவில்லை. உரிமையாளர் தளத்தை பரவலாக்கும் வகையிலேயே ராஜ்குந்த்ராவுக்கு குறிப்பிட்ட பங்குகளை விற்றோம்.
அதன்படி 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குந்த்ரா குடும்பத்தினருக்கு 11.7 சதவீத பங்குகள் தரப்பட்டன. இதை நாங்கள் ஐபிஎல்லுக்கும், கிரிக்கெட் வாரியத்திற்கும் முறைப்படி தெரிவித்து விட்டோம்.
மேலும், நாங்கள் எந்த அன்னியச் செலாவணி விதிமீறலிலும் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.