ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் உரிமையாளர் அல்ல- ஷில்பா ஷெட்டி
வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது அமலாக்கப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பில் வந்துள்ளது.
குறிப்பாக ஷில்பா ஷெட்டியை தங்களது கிடுக்கிப் பிடியில் கொண்டு வந்துள்ளனர் அமலாக்கப் பிரிவினர். மேலும் ஷில்பா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பினாமி என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐபிஎல் பதிவேட்டில் ஷில்பாவின் பெயரோ அல்லது அவரது கணவர் ராஜ்குந்த்ராவின் பெயரோ இல்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ஷில்பா ட்விட்டர் செய்தி மூலம் விளக்குகையில், நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் அல்ல. அது என்னுடையதும் இல்லை.
எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை. நான் அந்த அணியின் பிராண்ட் அம்பாசடர் மட்டுமே. அதேசமயம், எனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அதில் பங்கு உள்ளது என்று கூறியுள்ளார் ஷில்பா.
ராஜஸ்தான் அணியின் பினாமி உரிமையாளர் ஷில்பா என்று ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே அணிக்கு லலித் மோடியின் நெருங்கிய உறவினரும் முக்கிய பங்குதாரராக உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் லலித்மோடியின் நெருங்கிய உறவினர் இருவருமே அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜெய்ப்பூர் ஐ.பி.எல். பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இது, மொரீஷியஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இ எம் ஸ்போர்ட்டிங் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்த மொரீஷியஸ் நிறுவனத்தில், லலித்மோடியின் மைத்துனர் சுரேஷ் செல்லாராம் என்பவருக்கு இங்கிலாந்தின் வர்ஜின் தீவு நிறுவனத்தின் மூலமாக 44.15 சதவீத பங்குகள் உள்ளன. மோடிக்கு நெருக்கமான இங்கிலாந்தில் உள்ள மனோஜ் படாலேவுக்கு 32.4 சதவீத பங்குகள் உள்ளன.
பிரபல டி.வி. அதிபர் ராபர்ட் முர்டோக்கின் மகனுக்கு 11.7 சதவீத பங்குகளும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு 11.7 சதவீத பங்குகளும் இருப்பது வருமானவரி சோதனையில் தெரிய வந்துள்ளது.