திருமண வரவேற்பு அழைப்பிதழை விற்றதாக சோயப் மாலிக் மீது வழக்கு!
லாகூர்: திருமண வரவேற்பு அழைப்பிதழை விற்றதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மீது பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாலிக் மீது மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஹசன்ஷெராஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில், திருமண விழாக்களில் ஒரு உணவு வகையை மட்டுமே பரிமாற வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சோயப் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல வகை உணவுகளைப் பரிமாறியுள்ளனர். மேலும், விழாக்கள் இரவு 10 மணியுடன் முடிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் இவர்கள் மீறியுள்ளனர்.
அலங்கார விளக்குகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு உள்ளது. அதுவும் இங்கு மீறப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறிய சோயப் மாலிக்கு கோர்ட் தண்டனை விதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதேபோல் லாகூர் செஷன்ஸ்கோர்ட்டில் சப்தர் அலி என்பவர் தாக்கல் செய்துள்ள இன்னொரு வழக்கில், சோயப் மாலிக் – சானியா திருமண வரவேற்புக்கான அழைப்பிதழை சோயப்பின் உறவினரிடமிருந்து ரூ.15,000 கொடுத்து வாங்கிச் சென்றேன். ஆனால் என்னை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்து விட்டார்கள். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது என்று கூறியுள்ளார்.