பேச மறுத்த காதலி மீது அமிலம் வீசிய வாலிபர்
சென்னை: திடீரென காதலைக் கைவிட்டுவிட்டு பேசக் கூடமறுத்த கல்லூரி மாணவி மீது கார் டிரைவர் அமிலம் வீசினார். இதையடுத்து அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சென்னை திருவான்மியூர் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (23). திருச்சி கல்லுக்குழியில் உள்ள கள்ளத்தெருவில் சரண்யாவின் தாத்தா பிச்சை வீடு உள்ளது. தாத்தா வீட்டில் தங்கி இருந்து திருச்சியில் உள்ள கல்லூரியில் சரண்யா பி.காம். 3ம் ஆண்டு படித்து வந்தார்.
சரண்யா சென்னையில் இருந்த போது திருவான்மியூரை சேர்ந்த ராமஜெயம் (26) என்ற கார் டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் 5 வருடமாக காதலித்து வந்தனர்.
சரண்யா திருச்சி வந்த பிறகு ராமஜெயத்துடனான பழக்கத்தை குறைத்து கொண்டார். போனில் ராமஜெயம் பேசினாலும் அவர் தொடர்பை துண்டித்து விடுவார். இதனால் ராமஜெயத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சரண்யாவை பழிவாங்க திட்டம் தீட்டினார்.
இந்த நிலையில் நேற்று ராமஜெயம் சென்னையில் இருந்து சரண்யாவுக்கு போன் செய்து பேசினார். அப்போது சரண்யாவும் அவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சரண்யாவிடம் கொடுத்து விடுவதாகவும் இனி சரண்யாவை தொந்தரவு செய்யமாட்டேன் என்றும் கூறினார்.
ராமஜெயத்தின் பேச்சை நம்பிய சரண்யாவும் அவரை திருச்சிக்கு வர சொன்னார். இதை தொடர்ந்து இன்று காலை திருச்சி வந்த ராமஜெயம் போனில் சரண்யாவை தொடர்பு கொண்டார். தான் புகைப்படங்களுடன் திருச்சி வந்து விட்டதாகவும் எங்கே வந்தால் சரண்யாவை சந்திக்கலாம் என்றும் கேட்டார். தனது தாத்தா வீட்டு முகவரியை தெரிவித்த சரண்யா வீடு அருகே வரும்படி கூறினார்.
இதை தொடர்ந்து ராமஜெயம் அங்கு சென்று மாணவி சரண்யாவை சந்தித்து பேசினார். அப்போது தன்னால் அவரை மறக்க முடியவில்லை என்று கூறிய ராமஜெயம் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார்.
ஆனால் சரண்யா அவரிடம் முகம் கொடுத்து பேசாமல் போட்டோவை கேட்டு திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமஜெயம் பாட்டிலில் வைத்து இருந்த ஆசிட்டை சரண்யாவின் முகத்தில் ஊற்றிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
ஆசிட் பட்டதில் முகம் மற்றும் கழுத்து பகுதிகள் கருகியதால் சரண்யா அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தவர்கள் அவரை காப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.