விரைவில் ஹெட்லியை விசாரிக்க அனுமதி கிடைக்கும்- இந்திய தூதரகம்
வாஷிங்டன்: விரைவில் டேவிட் கோல்மேன்ஹெட்லியை விசாரிக்க அமெரிக்காவின் அனுமதி கிடைக்கும் என்று அமெரிக்கவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர் எரிக் ஹோல்டருடன், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோபால்சுப்ரமணியம் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இத்தகவலை ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரும் இந்த சந்திப்பின்போது உடன்இருந்தார். அப்போது ஹோல்டர் கூறுகையில், விரைவில் ஹெட்லியை இந்தியா விசாரிக்க அனுமதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் எவ்வளவு விரைவாக ஹெட்லியை விசாரிக்க அனுமதிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இரு நாடுகளும் உணர்ந்துள்ளன. எனவே ஹெட்லியை விசாரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்காவுக்கு இந்தியத் தரப்பு எடுத்துக் கூறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.