கொடைக்கானல் அரசு நிலம் மீட்டகப்படும் - கலெக்டர் வள்ளலார்
திண்டுக்கல்: கொடைக்கானலில் அரசு நிலத்தை வாங்கியவர்களிடம் இருந்து அது பறிமுதல் செய்யப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வள்ளலார் தெரிவீத்துள்ளார்.
கொடைக்கானலில் பலர் போலி பட்டா தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்து வந்ததாக புகார் எழுந்தது. இதனால், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ.கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நடத்திய ஆய்வில், 100 ஏக்கர் அரசு நிலத்திற்கு பட்டா வைத்திருப்பதாக கூறி, சிலர் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த இடத்தை பறிமுதல் செய்ய கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
கொடைக்கானலில் ஏழைகளுக்கு அளித்த பட்டா நிலத்தை, வசதி படைத்தவர்கள் வாங்கக் கூடாது. அப்படி வாங்கி இருந்தால் அந்த நிலப்பட்டாவை மாவட்ட நிர்வாகமே திரும்ப எடுத்துக் கொள்ளும்.
அதே நேரத்தில் ஏழைகளுக்கு அளிக்கும் பட்டா நிலத்தை அதே பகுதியில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே விற்பனை செய்யலாம்.
பீ மெமோ - வை காட்டி நிலங்களை விற்பனை செய்துள்ளனர். பீ மெமோ என்பது அபராதம் விதிக்கும் நோட்டீசாகும்.
கொடைக்கானலில் நிலம் வாங்குபவர்கள் யாரும் ஏமாறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று வாங்கலாம் என்றார்.