அமெரிக்காவில் பயங்கரம் – இந்திய டாக்டரை சுட்டுக் கொன்றார் சீன டாக்டர்
கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் வஜீந்தர் தூர். 34 வயதாகும் இவர் நியூஹேவன் பகுதியில் உள்ள தனது இருப்பிடத்திற்கு வெளியே கார் பார்க்கிங் பகுதியில் அந்த சீன டாக்டரால் சரமாரியாக சுடப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பாக டாக்டர் லிசான் வாங் கைது செய்யப்பட்டுள்ளார். தூருடன், புரூக்ளின் கிங்ஸ்புரூக் யூத மருத்துவமனையில் முன்பு பணியாற்றியவர்தான் வாங்.
44 வயதாகும் வாங் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர். சம்பவத்தின்போது தூரை சுட்ட வாங், அருகில் இருந்த அவரது கர்ப்பிணி மனைவியை நோக்கியும் சுட்டுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர்தப்பினார்.
டாக்டர் தூருடன் முன்பு பலமுறை மோதல் போக்கைக் கையாண்டுள்ளார் வாங் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் வாங் தொடர்ந்த ஒரு வழக்கில், டாக்டர் தூர் உள்ளிட்டோர் சீனர்களுக்கு எதிராக நடந்து கொள்வதாக கூறியிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் மருத்துவம் பயின்ற தூர், 2008ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார்.