காங்கிரசில் இணைகிறார் நடிகை குஷ்பு!
சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்ததால் அவர் அதிமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் அவர் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கணவர் சுந்தர் மற்றும் குடும்பத்தினருடன் லண்டனில் ஓய்வெடுத்து வரும் குஷ்பு ஓரிரு நாட்களில் சென்னை திரும்புகிறார்.
அதன் பிறகு அரசியலில் ஈடுபடும் முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குஷ்பு காங்கிரசில் சேர விரும்பினால் நாங்கள் வரவேற்போம் என்று கூறியுள்ளார்.
வருஷம் 16 படம் மூலம் தமிழில் அறிமுகமான குஷ்பு தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தமிழகத்தில் கோவில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் உண்டு.
சினிமா வாய்ப்புகள் சுத்தமாகக் குறைந்தவுடன் டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் குஷ்பு ஒரு காலத்தில் நடிகர் பிரபுவுடன் மிக நெருக்கமாக இருந்தவர். எதையும் வெளிப்படையாக பேசிவிடக் கூடியவர்.
சில ஆண்டுகளுக்கு முன் கற்பு குறி்த்து அவர் பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போராட்டங்கள் நடத்தின. கோவில் கட்டிய அதே தமிழகத்தில் குஷ்புவுக்கு செருப்புகளும், துடைப்பங்களும் காட்டப்பட்டன.
தமிழகமெங்கும் நீதிமன்றங்கள் 22 வழக்குகள் தொடரப்பட்டன. இரு தினங்களுக்கு முன்னர் தான் அவரை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவித்தது உச்ச நீதிமன்றம்.
இந் நிலையில் குஷ்புவின் கவனம் அரசியல் பக்கம் திரும்பியிருக்கிறது.
ராகுல் காந்தி சென்னை வருகை:
இந் நிலையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாமை நேரில் பார்வையிட அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அடுத்த மாதம் சென்னை வருகிறார்.
அப்போது அவர் முன்னிலையில் குஷ்பு காங்கிரசில் சேரலாம் என்று தெரிகிறது.