நாடாளுமன்றத்துக்கு முறையாக போய்க் கொண்டுதான் இருக்கிறேன் - அழகிரி
சென்னை: நாடாளுமன்றத்துக்கு நான் போவதில்லை என்று யார் சொன்னது. வெட்டுத் தீர்மானத்தின்போது கூட நான் நாடாளுமன்றம் போய் ஓட்டுப் போட்டு விட்டுதான் வந்தேன் என்று கூறியுள்ளார் மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. கேள்வி நேரத்தின்போது அவையில் இருப்பதில்லை. உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை. சபாநாயகர் மீரா குமார் பல முறை கேட்டுக் கொண்டும் அவரை வந்து சந்திப்பதில்லை என்று அழகிரி மீது சரமாரியாக புகார்கள் உள்ளன.
சமீபத்தில் லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது அழகிரி இல்லாதது குறித்து பாஜக, அதிமுக கட்சிகள் பிரச்சினை எழுப்பபின. மேலும் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா போனதும் சர்ச்சையை எழுப்பியது.
இந்த நிலையில் தாயகம் திரும்பி விட்டார் அழகிரி. நேற்று சென்னையில் மெடிக்கல் பார்க் என்ற நிறுவனத்தின் தொடக்க விழா நடந்த்து. இதில் கலந்து கொண்டு அதைத்தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் நாடாளுமன்றத்துக்குப் போவதே இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறதே என்று கேட்டபோது, யார் சொன்னது அப்படி. நேற்று கூட நாடாளுமன்றத்திற்குப் போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்தேனே என்றார் அழகிரி.
மே 1-ந் தேதி நீங்கள் ஆஜர் ஆகவேண்டும் என்று சபாநாயகர் மீரா குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளாராமே என்ற கேள்விக்கு அப்படியெல்லாம் எனக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றார் அழகிரி.