சார்க் மாநாட்டில் மன்மோகன் சிங் – பாக். பிரதமர் சந்திப்பு
கடந்த 9 மாதங்களில் இருவருக்கும் இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின்போது மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலிழந்து கிடப்பது குறித்து இந்தியாவின் கவலையை பிரதமர் தெரிவித்ததாக தெரிகிறது.
திம்புவில் 16வது சார்க் மாநாடு நடக்கிறது. இதற்காக பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சென்றுள்ளார். கிலானியும் மாநாட்டுக்காக திம்பு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் எகிப்தின் ஷார்ம் அல் ஷேக்கில்நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டின்போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் இப்போதுதான் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சந்திப்புக்கு முன்னதாக இரு தலைவர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு கை குலுக்கிக் கொண்டனர்.
முன்னதாக நேற்று மன்மோகனும், கிலானியும் இரண்டு முறை சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர். மேலும், சார்க் கிராமத்தில் இரு நாட்டு பிரதமர்களும் சிறிது தூரம் நடந்தபடி தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சமீபத்தில் அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு அமெரிக்காவில் நடைபெற்ற போது பிரதமர் மன்மோகன்சிங் கிலானியை சந்தித்து பேசவில்லை. கிலானியாக வந்து மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
மன்மோகன்சிங், கிலானி சந்திப்பு குறித்து மத்தியவெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த சந்திப்பு, மிகவும் நல்ல முறையில் இருந்தது. சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் இரு தலைவர்களும் பேசிக் கொண்டனர்.
அனைத்துப் பிரச்சினைகளையும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியா தயாராகஇருப்பதாக பிரதமர் கிலானியிடம் தெரிவித்தார். இருப்பினும் இந்த பேச்சவார்த்தையின்முன்னேற்றத்திற்கு தீவிரவாதம் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமரிடம் எடுத்துரைத்தார் மன்மோகன் சிங்.
பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் சம்பவம்தொடர்பான வழக்கு மிகவும் மந்த கதியில் நடைபெறுவதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இந்த சந்திப்பின்போது பலுசிஸ்தான் விவகாரம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. அடுத்த நாட்டு விஷயத்தில் தலையிடுவதை இந்தியா விரும்பாது என்பதை பாகிஸ்தான் நன்றாக அறியும்.
இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை விரைவில் நடத்தி இரு நாடுகளின் உறவிலும் மேலும் நம்பிக்கையை வலுப்படுத்த இரு பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர். விரைவில் இரு நாட்டுவெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்நடைபெறும் என்றார் ராவ்.
இதேபோல பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறுகையில், விரைவில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடுநடைபெறும்.
இந்த சந்திப்பு சரியான கோணத்தில், சாதகமான கோணத்தில் இருந்தது என்றார்.