ராமதாஸ் மீண்டும் வன்னியர் கோஷம்- இட ஒதுக்கீடு கோரி ஜூன் 28ல் போராட்டம்
கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில்,
வன்னியர் மற்றும் தலித் சமுதாயம் இணைய கடந்த 30 ஆண்டுகளாக நான் பாடுபட்டு வருகிறேன். ஆனால் வன்னியர்கள் இன்று கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை நாம் உணர்ந்தால் மறுநாளே வன்னியர் ஒருவர் கோட்டையில் அரியணையில் ஏறலாம். தமிழக அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகளிடம் நான் கேட்கிறேன். நாங்கள் ஆண்ட பரம்பரை. எங்களுக்கு ஆளத் தகுதியில்லை என்று யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்.
எங்குதான் ஜாதி இல்லை?
வன்னியர் ஓட்டு வன்னியருக்கே என்றால் 100 தொகுதிகளில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பற்றி சட்டசபையில் பேசினால் ஜாதி பற்றி பேசவேண்டாம் என்கிறார்கள். இந்திய மக்கள் உரிமைக்காக நாங்கள் செய்த போராட்டம் போல் எந்த கட்சி செய்தது. எந்த கட்சியில் தான் ஜாதி இல்லை.
பெரும்பான்மையான சமுதாயமாக வன்னியர்கள் இருப்பதால் தான் பேசக்கூடாது என்கிறார்கள். தமிழகத்தில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட வேண்டும். ஒரே வாரத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க நாங்கள் யோசனை சொல்ல தயார். முதல்வர் கருணாநிதி எங்களை அழைத்தால் குழுவாக நாங்கள் சென்று விளக்குவோம்.
எனவே கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும். ஆனால் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்த 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 8 சதவீதம் கூட கிடைக்கவில்லை.
இளைய தலைவர் அன்புமணி
என்னுடைய கால் சட்டசபையில், பாராளுமன்றத்தில் பதிய வேண்டுமென்று நான் விரும்பவில்லை. இந்த இளைய தலைமுறைகளுக்கு இளைய தலைவர் அன்புமணி கிடைத்துள்ளார். 5 ஆண்டுகளாக அவர் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது 63 ஆண்டுகளாக யாரும் செய்யாத சாதனைகளை செய்தார்.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு போராட்டத்தின் தொடர்ச்சியாக பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா ஜுலை மாதம் 18-ந் தேதி நடைபெறும். அதேபோல் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வேண்டி ஜுலை 28-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட அலுவலகங்கள் முன் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தப்படும்.
அதற்கு முன்னதாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக என்னுடைய தலைமையில் குழுவாக சென்று முதல்வர் கருணாநிதியை சந்திக்க உள்ளோம் என்றார் ராமதாஸ்.
ஆட்சி, அதிகாரம் வேண்டும்
அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வன்னிய சமுதாயத்தில் தான் அதிக அளவு இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை சினிமா மோகம், மது பழக்கத்திலிருந்து நல்வழிப்படுத்துவதற்காக டாக்டர் ராமதாஸ் பாடுபட்டு வருகிறார். நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். வன்னிய சமுதாய மக்கள் கல்வியில் மேம்பாடு அடைவதற்காக வன்னிய கல்வி அறக்கட்டளை உருவாக்கி இருக்கிறார்.
நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். நிச்சயமாக நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவோம். ஆகவே இடஒதுக்கீட்டிற்காக ஒன்று இரண்டல்ல ஏழாண்டு கூட சிறை செல்ல தயாராக உள்ளேன். நாம் இழந்துவிட்ட உரிமையை மீட்டெடுப்போம் என்றார்.
மீண்டும் ஜாதி ஏணியில்...
இந்த மாநாட்டின்போது, பாமக நிறுவனராக டாக்டர் ராமதாஸ் தன்னை காட்டிக் கொள்ளவில்லை. மாறாக வன்னியர் சங்க நிறுவனராகவே பெரிதாக முன்னிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.