சாத்தூரில் பிரபல ரவுடி என்கெளன்டரில் சுட்டுக்கொலை- மனைவி தற்கொலை
சாத்தூர்: சாத்தூரில் பிரபல ரவுடி என்கெளன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை அறிந்த அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.சாத்தூரில் தலைமை காவலர் நாகரத்தினம் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளி குமார் என்பவரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
குமார் ஒரு பிரபல ரவுடி ஆவார். சாத்தூர்- கோவில்பட்டி சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் கருவேலங்காட்டில் பதுங்கி இருந்த குமாரைப் பிடிக்க தனிப்படை போலீசார் சென்றபோது, போலீசாரை குமார் தாக்க முயன்றுள்ளார். அப்போது அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தகவலை அறிந்ததும் குமாரின் மனைவி சோலையம்மாள் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
சோலையம்மாள் - குமார் தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குமார் கொல்லப்பட்டதும், அவரது மனைவி ஒரு வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் கண்ணீர்ப் பேட்டி
தற்கொலை செய்து கொண்ட சோலையம்மாளின் அண்ணன் முத்துப் பாண்டி கூறுகையில், வீட்டில் சண்டை என்று கூறி எனது தங்கை வீட்டிற்கு வந்தார். அவரிடம் எனது தாயார் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் நான் வீட்டுக்கு வந்தேன்.
பின்னர் அறைக்குள் போனார் சோலையம்மாள். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தோம். அப்போது எனது தங்கை மயங்கிக் கிடந்தார். அவர் விஷம் குடித்திருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினோம். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார் என்றார் கண்ணீருடன்.