தூத்துக்குடியில் திமுக எதிர்ப்பு சாமியார் கைது –நித்தியானந்தாவை ஆதரித்து போஸ்டர் ஒட்டியவர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக பிரமுகரிடம் மோசடி செய்த சாமியார், அவரது மகனுடன் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ். இவர் தூத்துக்குடி ஓன்றிய தி்முக ஆதி திராவிடர் அணி அமைப்பாளராக இருந்து வருகிறார். பிரிண்டிங் பிரசும் நடத்தி வருகிறார்.
சமீபகாலமாக பிரிண்டிங் பிரஷ் நஷ்டத்தில் ஓடியதால் இதே பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பரிகார பூஜை நடத்தி வரும் சிவசக்தி அருணகிரி என்ற முரளிதரன் என்பவரிடம் சென்றார். அவரிடம் தொடர்ந்து பிரிண்டிங் பிரசில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பிரஸ் மீண்டும் லாபத்தி்ல் ஓட பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு சாமியார் 1000 முன்பணமாக கேட்டுள்ளார். மைக்கேல்ராஜ் 1000ஐ கொடுத்ததோடு தொழில் மீண்டும் லாபத்தில் ஓடினால் கேட்பதை எல்லாம் தருவதாக வாக்களித்தார். இதையடுத்து பரிகார பூஜை மைக்கேல் ராஜின் பிரிண்டிங் பிரசில் நடந்தது. இந்த பூஜையை சிவசக்தி அருணகிரியின் மகன் செந்தில்குமார் உறுதுணையாக இருந்தார்.
ஆனால் பூஜை முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் பிரிண்டிங் தொழிலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதுகுறித்து கேட்டபோது சாமியார் முறையாக பதில் சொல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மைக்கேல் ராஜ் தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.
தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் விசாரணை நடத்தி சிவசக்தி அருணாகிரி சாமியாரையும், அவரது மகன் செந்தில்குமாரையும் கைது செய்தார்.
இந்த சாமியார் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு எதிராக தாளமுத்து நகரில் 4 இடங்களில் டிஜிட்டல் போர்டு வைத்தவராம். மேலும், நித்தியானந்தா சாமியார் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தூத்துக்குடி முழுவதும் போஸ்டர் அடித்தும் ஒட்டியுள்ளார்.
சாமியார் மீது அனுமதியின்றி சிடி வெளியிட்டது, அரசை எதிர்த்து டிஜிட்டல் போர்டு வைத்தது, பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.