2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை-ராசா
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வினியோகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் இன்று தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா விளக்கமளித்தார்.
இதில் ரூ. 60,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரச்சனை கிளப்பி வருகின்றன.
இந் நிலையில் இன்று மாநிலங்களவையில் விளக்கமளித்த ராசா, நான எதையும் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.
இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் அமைச்சர் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதாரத்தை திரட்டியுள்ளதாகவும், இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் நிரா ராடியா என்ற பெண் புரோக்கரும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாயின.
நிராவின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதரங்கள் சிபிஐயிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நிரா ராடியா உள்ளிட்டவர்களின் தொலைபேசிகளை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு உதவியோடு ஒட்டு கேட்டு தகவல்கள் சேகரித்த சி.பி.ஐ. அதிகாரி வினீத் அகர்வால் மாற்றப்பட்டுள்ளதாகக் அதிமுக பொதுச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.