யஷ்வந்த் சின்ஹாவை முதல்வராக்கி ஜார்க்கண்ட்டில் ஆட்சியமைக்க பாஜக திட்டம்
காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வெட்டுத் தீர்மானத்தின்போது வாக்களித்து பாஜகவின் கடும் கோபத்தை சந்தித்தார் சிபு சோரன். ஆனால் திடீரென காங்கிரஸ் தூக்கிப் போட்டுவிடவே அதிர்ச்சி அடைந்த சோரன் பாஜகவிடம் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்.
நான் பதவியிலிருந்து விலகவும் தயார், நீங்களே ஆட்சியமைத்துக் கொள்ளுங்கள், ஆதரவைமட்டும்விலக்க வேண்டாம் என அவர் கூறி வருகிறார். மேலும் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரனும், தனது தந்தை செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பாஜகவின் நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளுநரை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தைக் கொடுக்க விருந்த பாஜக தற்போது அதை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜார்க்கண்ட்டில் நாமே ஆட்சியமைக்கலாமே என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும். யஷ்வந்த்சின்ஹாவை முதல்வர் பதவியில் அமர்த்தி, ஹேமந்த் சோரனை துணை முதல்வராக்கவும் பாஜக திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
வாபஸ் முடிவு நிறுத்திவைப்பு
இதற்கிடையே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு மன்னிப்பு கோரி சிபுசோரன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து இன்று பாஜக நாடாளுமன்றக் கட்சிகூடி ஆலோசித்தது.
இதில் அதவானி, பாஜக தலைவர் நிதின் கத்காரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சோரன் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவை நிறுத்திவைப்பது என்றும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.